Tuesday, June 17, 2008

வெஜிடபுள் பொங்கல்

தேவையானவை :

சாப்பாடு அரிசி அவரவர் விரும்பி சாப்பிடும் அரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 200 கிராம்
கேரட் - பெரியதாக - 1
பீன்ஸ் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை பட்டாணி - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
நூல்கோல் - 1
குடமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையானவை.


தாளிக்க:

மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
முந்திரி - 10
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - கொஞ்சம்.

செய்முறை :

அரிசி, பருப்பை தனிதனியாக, வறுக்க வேண்டும். வறுப்பதால் பொங்கல் வாசனையாக இருக்கும். குழைந்தாலும் கையில் எடுத்து சாப்பிடும்போது மென்மையாக இருக்கும். குக்கர் [அ] ஃப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து கொஞ்சம் நெய் ஊற்றி முந்திரி, மிளகு, சீரகத்தை வறுத்து எடுத்து வைக்கவும். காய்களை பொடியாகவோ, அவரவ்ர் விருப்பம் போல் நறுக்கி கொண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதே ஃப்ரஷரில் வெங்காயத்தை போட்டு வதக்கி, இஞ்சியை, பெருங்காயம் + காய்களை போட்டு நெய் ஊற்றி வதக்கவும். அரிசி+ பருப்பை = அளந்து கொண்டு 2 டம்ளர் இருந்தால் 4-1/2 டம்ளர் நீரை ஊற்றி உப்பும் போட்டு கொதிக்க விட்டு வறுத்த, மிளகு,சீரகத்தை போட்டு நன்கு கலந்து மூடி சிம்மில் எரியவிட்டு 1 விசில் வந்ததும் இறக்கவும். கொஞ்ச நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரியை போடவும். குடமிளகயை பொடியாக நறுக்கி கடைசியில் முந்திரி போடும்போது போட்டு நன்கு கலக்கவும். தேவையானால் மேலே நெய் ஊற்றி கொள்ளவும். இதற்கு கார சட்னி சூப்பராக இருக்கும்.

Saturday, June 14, 2008

உதிர்த்த வெங்காய பக்கோடா

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 2
பஜ்ஜி மாவு - 2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - பொரிக்க

பஜ்ஜி மாவு இல்லையெனில் கடலை மாவு - 1 கப் என்றால் அரிசி மாவு - 1/4 கப் தேவை .

செய்முறை :

வெங்காயத்தை இரண்டாக வெட்டி கொண்டு மேல் பக்கம் கெட்டியான பகுதியை வெட்டிவிட்டு நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். அதி கொஞ்சம் உப்பு க்லந்து உதிர்த்து கொண்டு மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்தூள், கறிவேப்பிலை எல்லாம் போட்டு பிசிறி, எண்ணெய்யை காயவிட்டு அதில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு மொறு மொறுன்னு வெந்ததும் எடுத்து விடவும். இதில் சிறிய கேரட்டை [ தேவைஎனில்] துருவி கலந்து பொரிக்கலாம்.இதற்கு மாவு குறைவாகவும், வெங்காயம் அதிகமாகவும் இருக்கனும். அப்போதுதான் வெங்காய வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

இட்லி மாவு போண்டா

தேவையான பொருள்கள் :

இட்லி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 5
மைதா மாவு - 1/4 கப்
பெருங்காயம் - கொஞ்சம்
உப்பு -ருசிக்கு
தாளிக்க - கடுகு, சீரகம் - 1/4 ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அது காய்வதற்குள் பெரியவெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி இட்லி மாவுடன்+ மைதா மாவு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து பெருங்காயம்+ கடுகு, சீரகம் தாளித்து, இட்லி மாவில் உப்பு இருப்பதால் தேவையான உப்பு போட்டு நன்கு கலந்து எண்ணெய் காய்ந்தவுடன் கையில் எடுத்து கிள்ளி போடவும். சிறிய போண்டா போல் வரும். பொன் கலரில் ஆனதும் எடுத்து விடவும். மிளகாய்க்கு பதில் மிளகும் போடலாம். விருந்தினர்களோ, [அ] அவசரத்திற்க்கு நொறுக்கு தீனி வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம்.

குறிப்புகள்: பஜ்ஜி

  1. பஜ்ஜிக்கு எந்த காய்கள் போட்டும் செய்யலாம். ஆனால் மெல்லியதாக நறுக்க வேண்டும். அப்போதுதான் காய்களும் வெந்து இருக்கும். காய்களை தடிமனாக நறுக்கினால் மேல் மாவு வெந்து இருக்கும். உள்ளே இருக்கும் காய்கள் வேகாது.
  2. மாவு கரைக்கும் போது இன்னும் கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து கொண்டால் இது போல் மொறு, மொறு அயிட்டங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை வராது.
  3. ஆரம்பத்தில் தண்ணீர் குறைவாக ஊற்ற வேண்டும். அதிகம் ஆனால் மறுபடியும் அதில் மாவு போட வேண்டி வரும். தண்ணீர் குறைவாக இருந்தால் பரவாயில்லை. உப்பும் அதேபோல்தான்.
  4. முதலில் எண்ணெய் கொஞ்சமாக வைத்து ஒன்று மட்டும் போட்டு உப்பு, காரம் பார்த்து பின் தேவையானால் போட்டு கொள்ளலாம்.
  5. காலிஃப்ளவர், பனீர் மஞ்சூரியன் செய்வதாக இருந்தால் மாவில் அந்த பொருள்களை கலந்துஃப்ரிஜில் மதியம் தேவை எனில் காலையிலேயே ரெடி செய்து வைத்து மாலையில் எடுத்து பொரித்து கொள்ளலாம். ஆனால் அன்றே உபயோகபடுத்தி விட வேண்டும்.
  6. சிலர் ஸ்நாஸ் செய்ய வாணலியில் அதிகமாக எண்ணெய் வைத்துதான் செய்வார்கள். அந்த பொருள் முழுகும் அளவுக்கு எண்ணெய் இருந்தால் போதும்.
  7. சீக்கிரம் வேலை முடிய ஒரே தடவையில் கலந்த பொருள்களை போடாமல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டால் எண்ணெயும் குறைவாகவே செலவு ஆகும். சுட்டெண்ணெய் உடலுக்கு கெடுதல் ஆவதை தடுக்கலாம். பொருளும் வேஸ்ட ஆகாது.
  8. கொஞ்சம் யோசனை செய்து செய்தால் செய்யும் பொருளும் ருசியாக, சூப்பராக வரும்.

பிரெட் சில்லி டோஸ்ட

தேவையான பொருள்கள் ;

பிரெட் - 10 ஸ்லைஸ்
பால் - 1 கப்
மிளகு - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 [ பொடியாக நறுக்கவும்]
உப்பு - ருசிக்கு

செய்முறை:

பாலில் மிளகுதூள், பச்சைமிளகாய், உப்பு போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். ஒவ்வொரு பிரட்டின் மேலும் இந்த பேஸ்டை தடவி மூடி விட்டு அதன் மேல் வெண்ணெய் தடவி ஸாண்ட்விச் டோஸ்ட்டர் [அ] தோசைகல்லில் [அடுப்பை சிம்மில் எரியவிட்டு ] போட்டு டோஸ்ட் செய்யவும்.பேஸ்ட் நன்கு மசிந்து இருக்கனும்.அப்போதுதான் சுவையாக இருக்கும்.

Friday, June 13, 2008

ஸ்டஃப் மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 2 கப்
காரம் தேவைஎனில் - 2 ஸ்பூன்
கொஞ்சம் ஊப்பு
எண்ணெய் பொரிக்க

ஸ்டஃப்க்கு மாவு : 1/2 கப் கடலைமாவு, தனியா பொடி- 1/4 ஸ்பூன், கரம்மாசாலா - 1/4 ஸ்பூன், உப்பு கொஞ்சம், கொஞ்சம் சீரகம், வேக வைத்த சிறிய உருளைகிழங்குடன் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து தண்ணீர் தெளித்து பூரணமாக பிசைந்து வைத்து கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி உள்ளே பூரணத்தை அடைத்து வைக்கவும்.

செய்முறை :

பஜ்ஜி மாவில் கொஞ்சம் உப்பு, மிளகாய்தூள் போட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு, ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை போட்டு மிதமாக எரிய விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுத்து சூடாக சாப்பிடவும். எல்லோரும் விரும்பி சாப்பிடும் காரசாரமான பஜ்ஜி இது.

மசாலா வேர்க்கடலை

தேவையான பொருள்கள் :

வேர்க்கடலை - 200 கிராம் [ வறுக்காதது]
பஜ்ஜி மாவு - 1-1/2 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்
இஞ்சி, பூண்டு விழுது [தேவையானால்]
எண்ணெய் பொரிக்க .

செய்முறை :

கடலையையுடன் மிளகாய்தூள், கலர்,உப்பு, பஜ்ஜி மாவையும் கலந்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசிறி ஊற வைக்கவும். எண்ணெய்யை காய விட்டு [ தண்ணீர் வேண்டும் எனில் இன்னும் கொஞ்சம் தெளித்து கொண்டு] கொஞ்சமாக கையில் எடுத்து உதிர்த்து போடவும். போடவுடன் கிளற கூடாது. கொஞ்ச நேரம் கழித்து திருப்பி விட்டு வெந்தபின் எடுக்கவும்.

ஸ்நாக்ஸ் வகைகள் :

குறிப்பு : உங்கள் வீட்டிலேயே பஜ்ஜி மாவை தயார் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள் :

கடலைப்பருப்பு - 1/2 கிலோ
பச்சரிசி - 100 கிராம்
வரமிளகாய் - 30
கட்டி பெருங்காயம் - 25 கிராம்
கல் உப்பு - 2 ஸ்பூன்
இவற்றை ந்ன்கு வெய்யிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து கொள்ளவும். இந்த மாவில் சமையல் சோடா - 1 ஸ்பூன், 50 கிராம் மைதா கொஞம் [ஆரஞ்சு கலர் தேவையானால்] போட்டு கலந்து ஆற விட்டு பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும் போது பயன்படுத்தலாம். பஜ்ஜி, ப்க்கோடாவுக்கு எண்ணெய் காய விட வேண்டும் அதற்கு புகை வரும் அளவுக்கு வேண்டாம். எண்ணெய் காயாமல் போட்டால் சதசதன்னு இருக்கும். மொர, மொரப்பாக வராது.



ஆப்பிள் பஜ்ஜி


தேவையான பொருள்கள் :

ஆப்பிள் - 1
பஜ்ஜி மாவு - 1 கப்
கொஞ்சம் மஞ்சள்பொடி
இன்னும் காரம் தேவை எனில் மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

ஆப்பிளை நன்கு சுத்தம் செய்து நீளமாக, மெல்லியதாக நறுக்கி விதையை எடுத்து கொள்ளவும். மாவில் எல்லாவற்றையும் கலந்து த்ண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். எண்ணெயை காய விட்டு ஆப்பிளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். தொட்டு கொள்ள தேங்காய் சட்னி அரைத்து கொள்ளவும். இல்லை எனில் தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

Thursday, June 12, 2008

வெங்காய பஜ்ஜி

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 1
பஜ்ஜி மாவு - 1கப்
மிளகாய்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
பொரிக்க எண்ணெய்

செய்முறை :

வெங்காயத்தை மெல்லிய வட்டமாக நறுக்கவும். காரம் தேவை எனில் போட்டு கொள்ளவும். பஜ்ஜி மாவை கரைத்து கொள்ளவும். எண்ணெய் காய விட்டு மாவில் வெங்காயத்தை தோய்த்து [ இரண்டு பக்கமும் மாவு படும்படி ] காய்ந்த எண்ணெயில் போட்டு, இரு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவும். பொன் கலர் ஆனவுடன் எடுத்து விடவும்.இந்த வெங்காய் பஜ்ஜி சூடாக சாப்பிட்டால் சுவை சூப்பராக இருக்கும்.

தக்காளி சாதம் [ 2 வகை]

தேவையான பொருள்கள் :


அரிசி - 2 கப்
தக்காளி - 300 கிராம்
புதினா - 20 இலை
மல்லி இலை - கொஞ்சம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் [அ] கெட்டியான பாலில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும்.1 - கப்
எண்ணெய் - 50 கிராம்
பட்டை - 1,லவங்கம் - 2 ஏலக்காய் - 2 பிரிஞ்சி இலை - 1
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :


தக்காளியுடன் புதினா, மல்லி, இஞ்சி, பூண்டு,உப்பு, பச்சைமிளகாய் அரைத்து வைக்கவும். அரிசியை நன்கு அலம்பி [ கழுவி] தண்ணீரை வடித்து தக்காளி கலவை + பாலில் ஊறவைக்கவும். 1/2 மணி நேரம் ஊறட்டும். குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பின் மசாலாவில் ஊறி கொண்டு இருக்கும் அரிசியை போட்டு வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள்,மஞ்சள்தூள் தேவையான த்ண்ணீர் ஊற்றி [ 4 கப்] குக்கரை மூடி விட்டு சிம்மில் வைத்து இ விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான மசாலா வாசனையுடன் தக்காளி பிரியாணி ரெடி. அடுப்ப்ன் எரிச்சல் சிறியதாக எரிவதால் தீயாது. தண்ணீர் குறைவாக வைத்தாலோ, அதிகம் ஆகி போனாலோ பயப்பட வேண்டாம். பதமாக வெந்து இருக்கும்.பிரியாணி செய்ய கொஞ்சம் அதிகம் எண்ணெய் சேர்த்தால்தான் உதிராக வரும். கடைசியில் கொஞ்சம் நெய்யும் ஊற்றலாம்.

தக்காளி ரசம் - 2 ம் வகை

தேவையான பொருள்கள் :

வேக வைத்த துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
தக்காளி - 2
ரசப்பொரி - 2 ஸ்பூன்
புளி விழுது - 2 ஸ்பூன்
கடா பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை
மல்லி இலை - கொஞ்சம்
நெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

புளியில் தக்காளியை நன்கு கரைத்து உப்பு, மஞ்சள்தூள் , ரசப்பொடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவேண்டும். பருப்பில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து, தாளிக்கும் கரண்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடா பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு, கரைத்து வைத்துள்ள பருப்பில் கலந்து, தக்காளி+புளியில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு நுரைத்து வந்தவுடன் இறக்கிவிடவும். மல்லி இலை போடவும். பெருங்காய வாசனையுடன் ரசம் சூப்பராக இருக்கும். காரம் இன்னும் அதிகம் தேவை எனில் தாளிக்கும் போது வரமிளகாய் கிள்ளி போட்டு தாளிக்க்லாம்.

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 1
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
வர மிளகாய் - 2
மஞ்சள்தூள் - கொஞ்சம்
தண்ணீர் - 3 டம்ளர்
கல் உப்பு - ருசிக்கு
தாளிக்க ; நெய், கடுகு, கறிவேப்பிலை.
பெருங்காயம் [அ] 2 பல் பூண்டு


செய்முறை :

தக்காளியை கொஞ்சம் சுடு நீரில் போட்டு தோலை எடுத்து அதனுடன் மிளகு, சீரகம், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் நெய் [அ] பிடித்த எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மஞ்சள்தூள், பெருங்காயம், வரமிளகாய் போட்டு வறுபட்டதும், அரைத்த தக்காளியை ஊற்றி கறிவேப்பிலை போட்டு நுரைத்ததும் இறக்கவும். புளிப்புக்கு தகுந்தபடி உப்பு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பருப்பு போடாமல் அவசரத்துக்கு உடனே செய்து விடலாம். தினமும் பருப்பு சேர்க்க வேண்டாம். வாரம் 2 நாட்கள் மட்டும் பருப்பு ரசம் செய்து, இது போல் சிம்பிளாக செய்யலாம். சுவையும் நன்றாக இருக்கும். வயிற்றுக்கும் நல்லது. ரசம் செய்தவுடன் சூடாகவும் குடிக்கலாம்.பூண்டு சேர்த்தால் கடுகு தாளிக்கும் போது தட்டி சேர்க்கலாம்.

தக்காளிபழம் சாப்ஸ்

தேவையான பொருள்கள் :

தக்காளிபழம் - 300 கிராம்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1கப்
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 5
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறிய துண்டு
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பட்டை - 1, லவங்கம் - 1, பிரிஞ்சி இலை - 1, ஏலக்காய் - 1
எண்ணெய் - 25 கிராம்
கல் உப்பு - ருசிக்கு

செய்முறை :

தக்காளியை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்தூள், தனியா தூள்,பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, தாளித்து மஞ்சள்பொடி போட்டு வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் கழித்து தக்காளி, உப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பின் அரைத்த விழுதுடன் 1 டம்ளர் தண்ணீர் கலந்து தக்காளியில் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். தண்ணீர் வேண்டுமானால் ஊற்றி கொள்ளலாம். மசாலா சுவை கொண்ட இந்த குழம்பு சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்றது. எண்ணெய் பிரிந்து மேலே வந்தால் நல்ல சுவை, மணம் இருக்கும்.

தக்காளியில் கீரை மசியல்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1/4 கிலோ
பாசி பருப்பு - 50 [100 ] கிராம்
கீரை - 1 கட்டு
பச்சை மிளகாய் - 6
பெருங்காயம் - கொஞ்சம்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
கல் உப்பு - ருசிக்கு ஏற்ப
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன்

பூண்டு வாசனை பிடித்தவர்கள் தேவையானால் சேர்த்து கொள்ளலாம். பூண்டு சேர்த்தால் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். சமையலுக்கு பாசிபருப்பை உபயோகபடுத்தும் போது பொன் நிறமாக வறுத்தால் வேகும் போது குழைவுவாக இல்லாமல் மலர்ந்து வெந்து இருக்கும்.

செய்முறை :

கீரையை ந்ன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி,பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், ம்ஞ்சள்பொடி, உப்பு போட்டு 1 விசில் விட்டாலே நன்கு வெந்துவிடும். வாணலியில் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு வறுபட்டவுடன், வெந்த பருப்பு கீரையை நன்கு மசித்து அதில் சேர்க்கவும்.குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். இதுபோல் செய்வதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள், சீக்கிரம் ரெடி ஆகிவிடும்.

Wednesday, June 11, 2008

தக்காளி குருமா

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
பெங்களூர் தக்காளி - 100 கிராம்
சிறிய தேங்காய் - 1 [ துறுவியது 1- கப்]
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1/4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - கொஞ்சம்
கச்கசா - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையானது

செய்முறை :

தேங்காயுடன் இஞ்சி, பூண்டு, சோம்பு,கசகசா, மிளகாய் தூள், தனியா தூள், 2 தக்காளியும் சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள் பொடிஉப்பு சேர்த்து வதக்கி பச்சை வாசனை போன பின் அரைத்த விழுதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து கொதிக்க விட்டு இறக்க்வும். புளிப்பு சுவை கொண்ட டேஸ்டியான குருமா. இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் தொட்டு கொள்ளலாம்.

தக்காளி பருப்பு

தேவையான பொருள்கள் :

தக்காளி- 300 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
வர மிளகாய் - 4
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள்பொடி - கொஞ்சம்
பெருங்காயம் - கொஞ்சம்
சிறிய வெங்காயம் - 50 கிராம்
கல் உப்பு - தேவையானது
எண்ணெய் - 25 கிராம்
காய்கள் - பிடித்த காய்கள்

செய்முறை :

துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேகவிட்டு கொள்ளவும். வாணலியில் கடுகு, வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம்,போட்டு தாளித்து சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும். இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மிளகாய்பொடி, உப்பு போட்டு வதக்கி வெந்த பருப்பை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மேலே நெய் ஊற்றி இறக்கவும். இந்த குழம்பை சாப்பாடு, டிபன் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.[ தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியும் ஊற்றலாம்.]

தக்காளி பொரிச்ச குழம்பு

தேவையான பொருள்கள் :

நாட்டு தக்காளி - 1/4 கிலோ
சிறிய வெங்காயம் - 100 கிராம்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
புளி - கொஞ்சம்
மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
தனியா பொடி - 1 ஸ்பூன்
வெந்தய பொடி - கொஞ்சம்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
கல் உப்பு - தேவையானது
மிளகு 1 ஸ்பூன், சீரகம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

தேங்காய் துருவலுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்பொடி, மிளகாய்தூள், தனியாதூள்,உப்பு போட்டு வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும். இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுண்டவிட்டு, அரைத்த தேங்காய் கலவையை ஊற்றி கொதிக்கும் போது இறக்கி விடவும். உறவினர்கள் வந்த சமயத்தில் சீக்கிரமாக இந்த குழம்பை செய்து விடலாம்.மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும்.பொரிச்ச குழம்பு ரெடி.

தக்காளி சூப்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1/4 கிலோ
நாட்டு தக்காளி - 1/4 கிலோ
கேரட் - 2
பெரிய வெங்காயம் மீடியம் அளவில் - 1
கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 50 கிராம்
மிளகு - 3 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
லவங்கம் - 1
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகு, லவங்கம், கேரட், கல் உப்பு போட்டு சிறிய குக்கரில் போட்டு 1 விசில் வந்ததும் இறக்கி ஆறவிடவும். தண்ணீரில் கார்ன்ஃப்ளார் [அ] மைதாமாவை கரைத்து கொள்ளவும். ஆறிய தக்காளியை மிக்ஸியில் அடித்து [ கூழ் போல் வரும்] தேவையான தண்ணீர் கலந்து கார்ன் ப்ளார் மாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போனவுடன் இறக்கவும். மேலே வெண்ணெய் போட்டு சூடாக சாப்பிடவும். நாட்டு தக்காளி புளிப்பு சுவைக்கு, பெங்களூர் தக்காளி கிரேவிக்கு.தேவையானால் மட்டும் கார்ன் ஃப்ளார் சேர்க்கவும். சாப்பிடும் போது கேரட்டை மிகவும் பொடியாக கட் செய்து அதன் மேல் போடலாம். சூப் கொதிக்கும் சமயம் கொஞ்சம் நூடுல்ஸ் இருந்தால் கையால் பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும். சூப் குடித்தால் உடலுக்கு நல்லது. நன்கு பசி எடுக்கும். சத்துள்ளது. இதே போல் எந்த காய்கள் சேர்த்தும் செய்ய்லாம். சீக்கிரமும் செய்து விடலாம்.


Tuesday, June 10, 2008

தக்காளி சாஸ்

தேவையான பொருள்கள் :

பெங்களூர் தக்காளி - 1 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
புதிய மிளகாய் பொடி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - சிறியதாக - 1
பூண்டு - 2 பற்கள் மட்டும்
உப்பு தேவையானது
சோடியம் பென்சோயேட் - 1/4 ஸ்பூன் இது போடாமலும் செய்யலாம்.

செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி, அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டும் வலையில் தக்காளியின், விதை, தோல் எல்லாம் தங்கிவிட வேண்டும். தக்காளியின் சாறு மட்டும் நுரை போல் இருக்கும். தக்காளியின் சாறை பெரிய கெட்டியான வாணலியில் கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி சுண்ட விட வேண்டும். அப்படியே ஊற்றினால் கொதிக்கும் போது வெளியில் எல்லாம் தெளித்து நிறைய வேஸ்ட் ஆகும். கொஞ்சமாக உற்றும்போது சீக்கிரமாக சுண்டி விடும். மிளகாய்தூள், உப்பு, சர்க்கரை [ தேவையானால் பிரிசர்வேட்டிவ்] போடவும். இதன் பதம் கரண்டியில் எடுத்தால் ச்ட்னிபோல் இருக்கும். ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைக்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடகூடிய ஐட்டம். அதுவும் வீட்டிலேயே செய்தால் செலவும் அதிகம் ஆகாது. ஃப்ரிஜில் எடுத்து வைத்து கொண்டு தேவையான போது பயன்படுத்தவும்.

தக்காளியில் செய்யும் ரெசிபிகள்

தக்காளி பச்சடி :

தேவையானவை
: தக்காளி - 1/2 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய் - 10
மஞ்சள் பொடி - கொஞ்சம்
உப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - கொஞ்சம்


செய்முறை
:

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மஞ்சள்பொடி போட்டு தக்காளியை போட்டு வதக்கவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு 1 சுற்று சுற்றி பச்சை மிளகாய், சர்க்கரை,உப்பு போட்டு மறுபடியும் ஒரு சுற்றி அதை தக்காளியில் போடவும். கொஞ்சம் சுண்டியபின் சிறிய கரண்டி தயிர் ஊற்றவும். நன்கு கிளறவும். இது தக்காளி வாசனை,காரம், தேங்காய் வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

Monday, June 9, 2008

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

பருப்பு உசிலி என்பது பருப்பை ஊறவைத்து கெட்டியாக உப்பு, காரம் போட்டு மிக்ஸியில் அரைத்து ஆவியில் வேக வைத்து, ஆறியபின் கையால் உதிர்த்து, இல்லையெனில் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால் பூப்போல் உதிராக இருக்கும். இதை வேக வைத்த காய்களுடன் கடைசியாக சேர்க்க வெண்டும். இதற்கு எந்த பருப்பு வேண்டுமானாலும் சேர்க்கலாம். கடலைபருப்பு,
துவரம்பருப்பு, பட்டாணிபருப்பு, எதுவாக இருந்தாலும் அவரவர் விருப்பம். உசிலிக்கு எந்த காயில் செய்தாலும் காயை பொடி, பொடியாக நறுக்கினால் உசிலி நன்றாக இருக்கும். பொடியாக நறுக்குவதால் காய் சீக்கிரம் வேகும்.காயின் கலர் மாறாது.காயின் வாசனை அப்படியே இருக்கும். உசிலியை எல்லா வகையான காய்களிலும் செய்யலாம். கீரைகளிலும் செய்யலாம். இதற்கு தேங்காய் சேர்க்க வேண்டாம். கடைசியில் வாசனைக்கு [தேவையானால்] 1/2 தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கலாம். ஆவியில் வேக வைத்து செய்வதால் எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டாம். யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஃப்ரஷர் பேனோ, சிறிய குக்கரோ இருந்தால் அதில் சிறிய கிண்ணத்தில் அரைத்த பருப்பை கீழே வைத்து அதன் மேல் நறுக்கிய காய்களை சுத்தம் செய்து பிழிந்து வைத்தாலே போதும். 1 விசிலில் வெந்துவ்டும். காய்களை தனியாகவும் வேகவிடலாம்.சீக்கிரம் சமையல் ஆக வேண்டும் என்றால் சேர்த்து வேகவிட்டு பின் தாளிக்கலாம்.


தேவையான பொருள்கள் :


கொத்தவரங்காய் - 1/4 கிலோ
பட்டாணிபருப்பு - 25 கிராம் [அ] 50 கிராம்
வரமிளகாய் - 5
கல் உப்பு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்


செய்முறை :

பருப்பை முதலிலேயே ஊறவிட்டு நன்கு வடியவிட்டு அதனுடன் வரமிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து ஆவியில் வேக விடவும். காயை பொடியாக நறுக்கி நன்கு கழுவி வாணலியில் கொஞ்சம்மாக் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், மஞ்சள்தூள் போட்டு
காயை போட்டு லேசாக தண்ணீர் தெளித்தால் சீக்கிரம் வெந்துவிடும்.காய்க்கு கொஞ்சம் உப்பு சேர்க்கவும். நீர் சுண்டியபின் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு சிம்மில் எரியவிட்டு நன்கு கிளறி [ தேவை எனில் 1/2 தேங்காய் எண்ணெய் கடைசியில் ஊற்றி] இறக்கவும்.பருப்பு உசிலி தயார்.


இந்த உசிலியில் கொஞ்சம் தயிர், கேரட், வெள்ளரிக்காய், பெரியவெங்காயம் நீளமாக நறுக்கி காரத்துக்கு பச்சை மிளகாய், உப்பு கொஞ்சம் சேர்த்தால் சப்பாத்திக்கு, தோசைக்கு தொட்டு கொள்ளலாம். கலந்த சாதத்துக்கும் தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

Sunday, June 8, 2008

அரைத்துவிட்ட சாம்பார்

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் - 1
சிறிய வெங்காய்ம் - 10
கத்தரிக்காய் - 1
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தக்காளி - 2 [அ] 4
துவரம் பருப்பு - 50 கிராம்
கல் உப்பு - தேவையானது

வறுக்க:

உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - சிறியதாக
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 8


செய்முறை:

துவரம்பருப்பை 2 முறை கழுவி மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும். புளியை சுடு நீரில் ஊற வைக்கவும். வாணல்யில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, தனியா, இவற்றை பொன் நிறமாக வறுத்து பின் தேங்காயை போடவும். முதலிலேயே தேங்காய் போட்டால் பருப்பு வறுபடாது. தேங்காய் போட்டு வறுபடும்போது மிளகாயை போடவும்.முதலிலேயே போட்டால் மிளகாய் கறுப்பாகிவிடும்.ஆதலால் கடைசியில் போடவும். வறுத்ததை மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி [சட்னி பதத்தில்] அரைத்து கொள்ளவும். காய்களை நீளமாக நறுக்கி பருப்பு தண்ணிரில் உப்பு போட்டுவேகவைத்து தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு அதனுடன், புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி வேகவிடவும். கொஞ்ச நேரத்தில் வெந்துவிடும். வெந்தபருப்புடன், அரைத்த விழுதை கரைத்து காய்கறியில் ஊற்றவும். தேவையான கல் உப்பு போடவும். கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். தக்காளியை பருப்புகள் வறுக்கும்போது பொடியாக நறுக்கி வதக்கியும் அரைக்கலாம்.குழம்பு கலராக இருக்கும். தக்காளியை பருப்புடன் வேகவைத்து கையால் கரைத்தும் கலந்து கொள்ளலாம். அவரவர் இஷ்டம். நன்கு கொதிக்கும் போது இறக்கி நெய் [அ] நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். மல்லியை மேலே தூவி விடவும்.

இதே சாம்பாரில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சிறிய கட்டி வெல்லம் சேர்த்தால் டிபனுக்கும் பயன் படுத்தலாம்.காரம் தேவை எனில் தாளிக்கும்போது வரமிளகாய் கிள்ளி போட்டு கொள்ளலாம்.புளி புதியதாக இருந்தால் சாம்பார் நல்ல கலரில் இருக்கும். பருப்பு வேகவிடும் போது மஞ்சள்தூள் சேர்த்தாலும் கலர் வரும். இது போல் செய்யும் சாம்பாரில் எந்த காய்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம். சேப்பங்கிழங்கு சேர்ப்பதாக இருந்தால் கொஞ்சம் எண்ணெய்விட்டு வதக்கியபின் சாம்பாரில் போடவும்.இந்த அரைத்துவிட்ட சாம்பார் சூப்பராக இருக்கும்.
.


கத்தரிக்காய் வதக்கல்

தேவையான பொருள்கள் :

பிஞ்சான கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
இட்லி பொடி [அ] சாம்பார் பொடி - 2 [அ] 3 ஸ்பூன்
உப்பு தேவையானது பொடியில் உப்பு இருப்பதால் கொஞ்சமாக சேர்க்கனும்
மஞ்சள் தூள் - கொஞ்சம்
எண்ணெய் - தேவையானது

செய்முறை - :

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மஞ்சள்பொடி சேர்த்து வெங்காயத்தை மெல்லியதாகவோ [அ] அவரவர் விருப்பம்போல் நறுக்கி வதக்கவும்.கத்தரிக்கயை நறுக்கும் போது உள்ளே சொத்தையாகவோ புழு இல்லமலோ பார்த்து கொள்ளவும். மெல்லியதாக நறுக்கி வெங்காயத்தில் போட்டு வதக்கவும். கொஞ்சம், உப்பு, எண்ணெய் சேர்த்து மூடி விட்டு சிம்மில் வைக்கவும்.தண்ணீர் சேர்க்ககூடாது. கத்தரிக்காயை மூடி வைக்கும் போது லேசாக தண்ணீர் விடும் அதிலேயே வெந்து விடும்.கடைசியாக பொடியை சேர்த்து வதக்கி இறக்கவும்.


வெள்ளரிக்காய் பச்சடி

தேவையான பொருள்கள் :

பெரிய வெள்ளரிக்காய் - 1
புளிக்காத தயிர் - 200 கிராம்
பச்சை மிள்காய் - 5
தாளிக்க கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
கொஞ்சம் எண்ணெய்.

செய்முறை :

வெள்ளரிக்காயை துருவி பிழிந்தால் நீர் வந்து விடும். அதை கீழே ஊற்ற வேண்டாம். மோர் கலந்து குடிக்கலாம். வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், பச்சைமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து வெள்ளரிக்காய், தயிர் ஊற்றி கறிவேப்பிலை, மல்லி போட்டு, உப்பு போட்டு நன்கு கலந்துவிட்டால் வெள்ளரிக்காய் பச்சடி ரெடி. சப்பாத்தி, கலந்த சாதம், எல்லாவற்றுக்கும் ஏற்றது. பச்சை வெங்காயவாசனை பிடித்தவர்கள் மெல்லியதாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம். சிறிய கேரட்டை துருவி சேர்த்தால் கலராக இருக்கும். ச்த்துள்ளது. அவரவர் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.

ருசியான சமையலுக்கு சில குறிப்புகள்

சமையல் ருசியாக இருக்க, செய்யும் குழம்பு, பொரியல், கூட்டு, கிரேவி,சட்னி,எதுவாக இருந்தாலும் செய்யும் அளவுக்கு தகுந்த படி மற்ற பொருள்களை சேர்க்க வேண்டும். அதிகமாக போனாலோ, குறைவாக இருந்தாலோ அதன் ருசி மாறிப் போகும். எல்லாவற்றுக்கும் இஞ்சிம் பூண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மசாலா பொருட்கள் பிடிக்காதவர்கள் அதை சேர்க்காமலே ருசியாக செய்யலாம். சமையல் ஒன்றும் பெரிய விஷயமிலை. செய்ய தெரியாதவர்கள் கூட பயப்படாமல் தைரியமாக செய்தால் சமையல் ரொம்ப ஈஸி தான். செய்ய, செய்யதான் சமையல் வரும்.

அடுப்பை எரியவிடும்போது அதில் வைத்து சமைக்கும் பாத்திரத்திற்க்கு மேல் தீ எரிய கூடாது.தீ அதிகமானால் செய்யும் பொருட்கள் வேஸ்ட் ஆகிபோய்விடும்.ரொம்ப சிறியதாக எரிந்தாலும் சீக்கிரம் வேகாது.

செய்யும் பதார்த்தங்களை பொருத்து அடுப்பு மிதமாக எரிய வேண்டும்.

குக்கரில் காய்கள் வேகவைப்பதாக இருந்தால் மிதமாக எரியவிட்டு விசில் வரும்முன்பு [ அதாவது 1 நிமிடம்] காய்களின் அளவுகளை பொருத்து அடுப்பை அணைத்துவிட்டால் அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

கீரைகள் செய்யும்போது கீரைகளை நன்கு கழுவி, பிழிந்து தேவையான வெந்தபருப்புடன், பச்சைமிளகாய்,வெங்காய், [தக்காளிபோடுவதாக இருந்தால்] கலந்து 1நிமிடம் விசில் வராமல் அடுப்பை அணைத்துவிட்டு திறந்தால் அதன் பச்சைகலரும் மாறாது. சத்தும் அப்படியே இருக்கும். சீக்கிரமே வெந்து இருக்கும்.

சாம்பாருக்கு சேர்க்கும் காய்களையும் பருப்பு தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு சிறிய குக்கர் [அ] ஃப்ரஷர் பேனில் வைத்தாலும் ஹையில் வைத்து விசில் வரும் முன்பே [1நிமிடம் போதும் ] அணைத்து விட்டால் வெந்துவிடும்.

குறைவான நபர்கள் இருக்கும் வீட்டில் மசாலா பொருட்களை கொஞ்சமாக போடனும். அதிகமானால் கசக்கும். ருசியும் மாறி போகும்.பூண்டு வாசனை பிடிக்காதவர்கள் சேர்க்காமலேயே செய்யலாம். ருசி வரும்.

கொஞ்சம் பொறுமையாகவும், யோசனையுடனும் சமையல் செய்தால் நம் வீட்டு சமையல் ஹோட்டல் சமையலைவிட சூப்பராக வரும். எதுவுமே நம் கையில்தான் இருக்கு. போடும் அளவு, செய்யும் முறை, பக்குவம் இதுதான் சமையல் ரகசியம்.

உப்பு எப்போதுமே குறைவாக போட்டு பின் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். அதிகமானால் அதற்கு எதையாவது கலந்தால் அதன் ஒரிஜனல் தன்மை போய் விடும். கொஞ்ச நாளில் சமையல் செய்ய அதுவும் சரியாகிபோகும். எந்த சமையல் செய்தாலும் அதுக்கு என்ன பொருட்கள் சேர்க்கவேண்டுமோ அதை மறக்காமல் சேர்த்தால் எல்லார் வீட்டு சமையலும் சூப்பர்தான்.

ஃப்ரைடு ரைஸ்

தேவையான பொருள்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
கேரட் - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன் [மட்டும்]
பீன்ஸ் - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன் [ மட்டும்]
அஜினமோட்டோ - 1 ஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - 2 ஸ்பூன்
உப்பு தேவையானது.

செய்முறை
:

சாதத்தை உதிராக வடித்தும் செய்யலாம். குக்கரில் நேரடியாகவும் [தம்] செய்யலாம். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், 1 பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதக நறுக்கி, பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பும் போட்டு கொதி வரும் சமயம் அரிசியை போட்டு சிம்மில் வைத்து 1 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து காய்கள், வெள்ளை மிளகுதூள்,அஜினமோட்டோ கலந்து மூடி வைத்து விடவும். சாப்பிடும் போது எடுத்தால் நன்கு பதமாக இருக்கும். மேலே வெங்காயதாள் போட்டு அலங்கரித்து சாப்பிடவும்.

Saturday, June 7, 2008

தயிர் சாதம்

தேவையான பொருள்கள் :

பச்சரிசி - 200 கிராம்
பால் - 1/2 லிட்டர்
தயிர் - 100 கிராம்
உப்பு - கொஞ்சம்

தாளிக்க : கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மாதுளை முத்துக்கள் - 10 கிராம்
திராக்‌ஷை - கருப்பு , வெள்ளை - கொஞ்சம், முந்திரி - 10, ஆப்பிள் துண்டுகள் - சிறியதாக - 10

செய்முறை :

அரிசியை நன்கு கழுவி பாலுடன் 1 கப் தண்ணீர் கலந்து குக்கரில் குழைய வேக விடவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து ஆறிய சாதத்தில் உப்பு, தாளிதம் செய்ததை போட்டு நன்கு கலந்து, பின் தயிர் ஊற்றி பழதுண்டுகளை போட்டு கலக்கவும். தேவையானால் வெள்ளரி துண்டுகளும் சேர்க்கலாம். செய்து உடனே சாப்பிடலாம்.வெங்காய வாசனை பிடித்தவர்கள் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கலந்து சாப்பிடலாம். உடல் சூட்டை தணிக்கும்.காரத்திற்க்கு பச்சை மிளகாயை + இஞ்சியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருள்கள் :

கறிவேப்பிலை - உதிர்த்தது - சிறிய கப் அளவு
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய கட்டி
உப்பு - கொஞ்சம்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,மிளகு, சீரகம், கட்டி பெருங்காயம்,இவற்றை பொன் நிறமாக வறுத்து, கடைசியில் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து ஆறிய பின், கல் உப்பை போட்டு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். உதிரான சாதத்தில் இந்த பொடியை போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி நன்றாக கலக்கவும். கறிவேப்பிலை வாசனையுடன் சூப்பராக இருக்கும்.

பூண்டு சாதம்

தேவையான பொருள்கள் :

சிறிய வெங்காயம் [அ] பெரிய வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல் [ பெரியதாக]
வரமிளகாய் - 7
புளி - எலுமிச்சை அளவு [அ] சிட்ரிக் ஆசிட் 1/2 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிராக வடித்து கொள்ளவும். வெங்காயம், பூண்டு, வரமிளகாயை லேசாக வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு, தாளித்து கொஞ்சம் மஞ்சள்பொடி போட்டு வதக்கவும்.பின் அரைத்ததை போட்டு [ தண்ணீர் ஊற்றாமல் சிறிய ஜாரில் போட்டு விட்டு, விட்டு அரைத்தால் மசிந்துவிடும்.சுருள வதக்கி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

உளுந்து பொடி சாதம்

தேவையான பொருள்கள் :

சாதம் - 3 கப்
சிட்ரிக் ஆசிட் - 1/4 ஸ்பூன் [அ] எலுமிச்சை பழம் - 1
உளுத்தம் பருப்பு - 4 ஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயம் சிறிய கட்டி
கல் உப்பு - தேவையானது

செய்முறை:

உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், கல் உப்பு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து கொஞ்சம் மஞ்சள்பொடி சேர்த்து சாதத்தை போட்டு கிளறி பொடி செய்துள்ளதை போட்டு கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு [அ] சிட்ரிக் ஆசிட் கலந்து விடவும். உளுந்து பொடி சாதம் ரெடி.

எள் சாதம்

தேவையான பொருள்கள் :

சாதம் - 3 கப் [அ] அவரவருக்கு தேவையானது
வெள்ளை எள்- 5 ஸ்பூன்
வரமிளகாய்-6 [அ] 8
கல் - உப்பு கொஞ்சம்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
எண்ணெய் - 5 ஸ்பூன்

செய்முறை:

எள்ளை வெறும் வாணலியில் பொரியும்படி வறுத்து கொள்ளவும். பருப்பு, வரமிளகாய், பெருங்காயம், உப்பு வறுத்து ஆறியபின் மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து, கடைசியில் எள்ளை அதனுடன் போட்டு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை சாதத்தில் போட்டு சாதம் உடையாமல் கலக்கவும். கொஞ்சம் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் போடவும். எள் வாசனையுடன் சாதம் சூப்பராக இருக்கும்.

புதினா சாதம்

தேவையான பொருள்கள்:

புதினா _ சிறிய கட்டு
சிறிய வெங்காயம் - 5
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 7
பெருங்காய தூள் - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையானது

செய்முறை :

சாதத்தை உதிராக வடித்து கொள்ளவும். புதினா, வெங்காயம், இஞ்சி, மிளகாய், இவற்றை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்து வைத்ததை போட்டு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும். சீக்கிரமே சுண்டி விடும். சாதத்தை அதில் போட்டு உடையாமல் கிளறவும். தேவையானால் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பூண்டு வாசனை தேவைபட்டால் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். பூண்டு சேர்க்கும் போது பெருங்காயம் சேர்த்தால் அதன் வாசனை தெரியாது.

பூண்டு சாதம்

தேவையானவை :

உதிராக வடித்த சாதம் - 3 கப்
பூண்டு - 20 பற்கள்
வெங்காயம் - 2 - பொடியாக நறுக்கவும்
இஞ்சி - பொடியாக நறுக்கியது - 1 ஸ்பூன்
மிளகு, சீரக பொடி- 2 ஸ்பூன்
உப்பு - தேவையானவை

செய்முறை:

வாணலியில் எண்ணெய் [அ] நெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, பூண்டை பொடியாகவோ, தட்டி போட்டோ வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, மிளகு சீரகபொடி போட்டு வறுத்தபின் அடுப்பை சிம்மில் எரியவிடவும். சாதத்தை போட்டு மெதுவாக கிளறவும்.கடுகு தாளிக்கும்போதே கறிவேப்பிலை போட்டால் கலர் மாறாது. தேவையானால் கேரட் துறுவி போட்டு கொள்ளலாம்.

தக்காளி சாதம்

தேவையான பொருள்கள்:


உதிராக வடித்த சாதம் - 3 கப்
தக்காளி - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையானது
இஞ்சி - சிறிய துண்டு


செய்முறை:

கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் தூள், தனியாதூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சுருள வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வரும் சமயம் சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும். சீக்கிரம் செய்து விடலாம். வேலைக்கு செல்பவர்கள் லஞ்சுக்கு எடுத்து செல்ல இது போல் செய்து கொள்ளலாம். ஆறிய பின் டிபன் பாக்ஸில் போடனும்.ஹாட் பாக்ஸில் எடுத்து செல்வதானால் சூடாகவே போட்டு கொள்ளலாம்.

வெங்காய சாதம்

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பெரிய வெங்காயம் [அ] சிறிய வெங்காயம்- 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 7
தாளிக்க - கடுகு, சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
எண்ணெய் - 5 ஸ்பூன் [அ] நெய்


செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும். வெங்காயத்தை பொடி, பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயையும் பொடியாகவோ [அ] கீறி போட்டோ வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கியபின் சாதத்தை சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கிளறவும்.மேலே கறிவேப்பிலை போட்டு கொள்ளவும். சீக்கிரம் செய்து விடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் கொடுக்க இதுபோல் செய்து கொடுக்கலாம்.

Friday, June 6, 2008

சீரக சாதம்

தேவையான பொருள்கள்:

உதிராக வடித்த சாதம் - 2 கப்
பாசுமதி அரிசியாக இருந்தால் சுவை சூப்பராக இருக்கும்
முந்திரி - 10 கிராம்
சீரகம் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரகத்தை உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து, முந்திரியை சிறியதாக உடைத்து வறுக்கவும். கொஞ்சம் நெய் சேர்த்து சாதத்தை போட்டு உடையாமல் கிளறவும். மேலே கறிவேப்பிலை போட்டு சாப்பிடவும். பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு கிளறவும். சீரக சாதம் ரெடி.

காளான் சாதம்

தேவையானவை:

உதிராக வடித்து வைத்துள்ள சாதம்- 3 கப்
பெரிய வெங்காயம்-2
வெங்காய தாள்- கொஞ்சம்
இஞ்சி - பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
பூண்டு - பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-5
மிளகுதூள்- கொஞ்சம்
அஜினமோட்டோ- கொஞ்சம்
உப்பு - தேவையானவை
நெய் [அ] எண்ணெய்- 3 ஸ்பூன்
காளான் - 200 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் [அ] நெய் ஊற்றி வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும். காளானை தேவையான அளவில் கட் செய்து நன்கு நீரில் கழுவி கைகளால் அழுத்தி பிழிந்தால் அதில் நீர் எல்லாம் வந்து விடும். அதை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். மிளகுதூள், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து வதக்கவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு வதக்கவும். நன்கு சுண்டியபின் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை போட்டு கிளறி இறக்கும் போது வெங்காயதாளை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கவும். காளான் சாதம் தயார். மசாலா வாசனை வேண்டும் என்றால் காளானை போடும் போது 1 ஸ்பூன் தூவிகொள்ளலாம். சாப்பிடும்போது (தேவையானால்) பூந்தியோ, மிக்ஸரோ தூவி சாப்பிடவும். இல்லையெனில் கேரட்டை துறுவி மேலே போட்டு கொள்ளலாம். அவரவர் இஷ்டம் போல் சாப்பிடலாம்.

Tuesday, June 3, 2008

கத்தரிக்காய் குழம்பு

தேவையானவை:

கத்தரிக்காய்- 200 கிராம்,
சிறிய வெங்காயம்- 10,
தக்காளி-5 ,
புளி பேஸ்ட்- 1 ஸ்பூன்,
பூண்டு- 10 பல், (தேவையானால்)
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்,
உப்பு. தேவைக்கு,
பச்சை மிளகாய்-5
எண்ணெய்- 5 ஸ்பூன்.

செய்முறை:

தக்காளியுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.கொஞ்சம் வதங்கும்போது சாம்பார்பொடி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கத்தரிக்காயை காம்பை எடுத்துவிட்டு மேலே மட்டும் கொஞ்சம் கீறியபடி நறுக்கி கொண்டு எண்ணெய் ஊற்றி வதக்கவும்.புளி மஞ்சள் பொடி, உப்பு போட்டு அரைத்து வைத்ததில் 2 டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் எரிய விடவும். 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். குழம்பு ரெடி.

தக்காளி குழம்பு

தேவையானவை:

தக்காளி- 10,
சிறிய வெங்காயம்- 100 கிராம்,
மிளகாய் தூள்-2 ஸ்பூன்,
தனியா தூள்-1 ஸ்பூன்,
தேங்காய் துறுவல்- 3 ஸ்பூன்,
சோம்பு-1 ஸ்பூன்,
கார்ன் ஃப்ளார்- 1 [அ] 2 ஸ்பூன்,
உப்பு தேவையானவை.
எண்ணெய்- 50 கிராம்.

செய்முறை:

மேலே கூறி எல்லா பொருட்களையும் வெறும் வாணலியில் வதக்கி ஆறியபின் மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும். கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். வாணலியில் அரைத்த விழுதில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கார்ன்ஃப்ளார்ரை ஊற்றி (தேவையானால் தண்ணீர் ஊற்ற)கொதிக்கும் போது இறக்கி விடவும். இந்த குழம்பை சீக்கிரம் செய்து விடலாம்.சுவையும் சூப்பராக இருக்கும். மசாலா வாசனை வேண்டும் எனில் குழம்பு கொதிக்கும் போது கறிமசால் பொடி சேர்க்கலாம்.

பூசணிக்காய் குழம்பு

தேவையானவை:

பூசணிக்காய்- 1/4 கிலோ,
புளி- எலுமிச்சை அளவு,
தக்காளி- 3
சின்ன வெங்காயம்-20,
பச்சை மிளகாய்-4,
உப்பு- தேவையான்வை.

அரைக்க:

கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெந்தயம் கொஞ்சம், சிறிய கட்டி பெருங்காயம் வறுத்து, கடலைபருப்பு- 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன், தனியா- 3 ஸ்பூன், வரமிளகாய்-6, 3 ஸ்பூன் தேங்காய் துறுவல் சேர்த்து பொன் நிறத்தில வறுத்து கொண்டு மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும். அரைத்ததை எடுத்து விட்டு அதிலேயே தக்காளியை அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும். பின் காயை தேவையான அளவில் கட் செய்து வதக்கவும். மஞ்சள்பொடி, உப்பு,புளி தண்ணீர் சேர்த்து மூடி வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். பின்னர் தக்காளியை சேர்த்து கொதிக்கவிட்டு சுண்டியபின் அரைத்து வைத்ததை ஊற்றி கொதிக்க விட்டு தேவையான தண்ணீர் சேர்த்து சிம்மில் எரியவிட்டு கொதிக்க விடவும். இந்த குழம்பு, தண்ணீயாகவும் இருக்க கூடாது, கெட்டியாகவும் இருக்க கூடாது. கறிவேப்பிலை, மல்லி இலை போடவும்.

மெக்ரோனி புளிகுழம்பு

தேவையானவை:

மெக்ரோனி- 200கிராம்,
பெரிய வெங்காயம்- 2,
தக்காளி-5,
புளி விழுது- 1 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்,
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,
மல்லி தூள்- 1/2 ஸ்பூன்,
உப்பு தேவையானவை.
வெந்தயம், சோம்பு, - 1/4 ஸ்பூன்.
எண்ணெய்- 50 கிராம்.

செய்முறை:

மெக்ரோனியை சுடுநீரில் போட்டு கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும். வெந்தயத்தை லேசாக வறுத்து, சோம்பு, தக்காளி, வெங்காயத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது,மஞ்சள் பொடி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்துள்ளதை போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது மிளகாய்பொடி, மல்லிபொடி,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வதக்கி, புளி விழுதை சேர்க்கவும். சிறிய கட்டி வெல்லம் சேர்க்கவும். 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வரும் போது வடித்து வைத்துள்ள மெரோனியை போட்டு சிம்மில் வைத்து மூடிவிட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். கொஞ்ச நேரத்தில் குழம்பு பதம் வந்து விடும். மசாலா வாசனையுடன் குழம்பு சூப்பராக இருக்கும். மல்லி இலை போட்டு சாப்பிடவும்.இது சாப்பாட்டுக்கும், டிபனுக்கும் ஏற்றது. தேவையானால் இன்னும் தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.மெக்ரோனி தண்ணீரை உறிந்து கொள்ளும்.