Tuesday, May 19, 2009

பூந்தி தயிர்பச்சடி

தேவையானவை :

புளிக்காத தயிர் - 2 கப்
காராபூந்தி - 1 கப்
கேரட் - சிறியதாக - 1
வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 5
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
புதினா இலை - 10
மல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தயிரில் உப்பு கலந்து கடைந்து அதில் மல்லி, புதினாவை நறுக்கி போட்டு கொள்ளவும். கேரட், வெள்ளரிக்காயை துருவி கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிகொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தபின் பெருங்காயம் போட்டு அடுப்பை அணைத்து எல்லாவற்றையும் போட்டு, தயிரையும் கடைந்து ஊற்றி நன்றாக கலக்கவும்

Monday, May 18, 2009

வாழைப்பூ பச்சடி

தேவையானவை :

துவரம்பருப்பு - 50 - கிராம்
வாழைப்பூ - சிறியதாக - 1 கசப்பு இல்லாமல் இருக்கனும்
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு - 1/4 ஸ்பூன்
கடலைபருப்பு - 1/4ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

வாழைப்பூ கசக்காமல் இருக்குதா என்று பார்க்க பூவை பிரித்து உள்ளே இருக்கும் இதழை கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு பார்த்தால் கசக்காமல் இருக்க வேண்டும். பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். [ கறுத்து போகாமல் இருக்கும்] வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாய்,போட்டு வறுபட்டபின் பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு சுருள வதக்கவும். மோரில் ஊறிய வாழைப்பூவை நன்கு பிழிந்து போட்டு +மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பொடியாக நறுக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். பின்பு வெந்த பருப்பை வாழைப்பூ கலவையில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாகவும் தாளிக்கலாம். மேலே மல்லி இலை போடவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தளர்வாக வேண்டும் எனில் 1/2 கப் தண்ணீர் சேர்க்கலாம்.

Sunday, May 17, 2009

மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையானவை:

மாங்காய் கொஞ்சம் புளிப்பாக - 1
சர்க்கரை - 1/2 கப்
வெல்லம் - 1/4 கப்
சுக்கு பொடி - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பச்சை மிளகாய் - 4

தாளிக்க:

கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - கொஞ்சம்
வரமிளகாய் - 2

செய்முறை:

மாங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு 1 விசில் விட்டு வேகவிடவும். வெல்லத்தை கல், மண் போக சுத்தம் செய்து அதனுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெந்தமாங்காயை நன்கு மசித்து சுக்கு பொடி, உப்பும் போட்டு வெல்ல+சர்க்கரை கலவையில் கலந்து விடவும். வாணலியில் 2 எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய், வரமிளகாயை கிள்ளி போட்டு வறுபட்டதும் பச்சடியில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

மாம்பழ தயிர்பச்சடி

தேவையானவை:

பழுத்த மாம்பழம் - 1
புளிக்காத தயிர் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
மல்லி இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு


தாளிக்க : 
கடுகு, பெருங்காயம் - கொஞ்சம்,
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை :

மாம்பழத்தை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மாம்பழதுண்டுகள் உப்பு சேர்த்து கையால் நன்கு பிசைந்து [அ] மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். அதில் தயிரையும் ஊற்றி நன்கு கலக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் காயவிட்டு கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் தயிர் கலவையில் போட்டு கலக்கவும். மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போடவும். இனிப்பும் புளிப்பும் கலந்து இருக்கும் இந்த பச்சடி.

Saturday, May 16, 2009

தக்காளி, அன்னாசிப்பழம் பச்சடி

தேவையானவை :

அன்னாசிப்பழம் - பழுத்து, புளிப்பு இல்லாமல் பாதி - 1/2
நன்கு பழுத்த பெங்களூர் தக்காளிப்பழம் - 10
சர்க்கரை - 50 கிராம்
ரோஸ் எசன்ஸ் - 2 துளிகள்
கார்ன்ஃப்ளார் - 1/2 ஸ்பூன்

செய்முறை :

அன்னாசிப்பழத்தை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கெட்டியான வாணலியில் அன்னாசிப்பழத்தை வதக்கி சுண்டியதும் தக்காளியை போட்டு குறைந்த தீயில் கொதிக்க விடவும். கார்ன்ஃப்ளாரை 1/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதி வந்ததும் இறக்கி ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். இதை சப்பாத்தி, பிரெட், பீட்ஸா எல்லாத்துக்கும் தொட்டு கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு தயிர் பச்சடி

தேவையானவை :

உருளைக்கிழங்கு - 200 கிராம் [அ] 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 5
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 கப்
உப்பு - ருசிக்கு ஏற்ப

தாளிக்க : கடுகு,
எண்ணெய் - 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவிட்டு மசித்து கொள்ளவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும் உருளைக்கிழங்கை போட்டு 1 நிமிடம் வதக்கி ஆறிய பின் உப்பு, தயிர்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கடைசியில் தக்காளியை நீளமாக நறுக்கி போட்டு நன்கு கலந்து சாப்பிடலாம்.

கத்தரிக்காய் தயிர்பச்சடி

தேவையானவை :

பிஞ்சு கத்தரிக்காய் - 4
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4 [அ] 6
புளிக்காத தயிர் - 1 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க : கடுகு, கொஞ்சம் பெருங்காயம், எண்ணெய் - 1 ஸ்பூன்.


செய்முறை :

கத்தரிக்காயை நீளமாகவும், மெல்லியதாகவும் நறுக்கி கழுவி கொண்டு வாணலியில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும் காயை போட்டு வதக்கிக்கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிகொள்ளவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு + தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும். மேலே மல்லி இலை போட்டு கொள்ளவும். வித்யாசமான ருசியுடன் சூப்பராக இருக்கும்.

தேங்காய் - தக்காளி பச்சடி

தேவையானவை:

தக்காளி சிவப்பாக - 4
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 கப்
பச்சைமிளகாய் -6
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவைக்கு

தாளிக்க: கடுகு - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். இதனுடன் தேங்காய், உப்பு, தயிர் சேர்த்து ஒன்றாக கலக்கவும். எண்ணெயை காய விட்டு கடுகு போடு வெடித்தபின் அதில் சேர்த்து நன்றாக கலந்து மேலே மல்லி தழை போட்டு கொள்ளலாம்.

Friday, May 15, 2009

அவல் வடை

தேவையான பொருட்கள்:

அவல் - 200 கிராம்
உருளைக்கிழங்கு - சிறியதாக ஒன்று
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

அவலை மிக்ஸியில் குருணையாக பொடித்து தண்ணீர் ஊற்றி நன்கு அலம்பி வடித்து விடவும். அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதிலேயே அவல் ஊறிவிடும். உருளைக்கிழங்கை வேக்விட்டு , உதிர்த்து கொள்ளவும். ஊறிய அவலுடன் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்,வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு எல்லாம் போட்டு நன்கு கலந்து, பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு வாணலியில் எண்ணெய் காயவிட்டு வடைகளாக தட்டி பொன் கலரில் பொரித்து எடுக்கவும்.

அவல் இட்லி

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய்- 5 [அ] 7
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 ஸ்பூன்


தாளிக்க:
கடுகு, உழுந்து, கடலைப்பருப்பு - தலா 1/2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

அவலை மிக்ஸியில் ரவைபோல் குருணையாக பொடித்து கொள்ளவும். அதில் ஒரு கப் தயிரை கடைந்து 1 கப் தண்ணீர் சேர்த்து, உப்பும் போட்டு அவல் குருணையை ஊற விடவும். 5 நிமிடத்தில் ஊறிவிடும். அவல் ஊறுவதற்க்குள் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்ப்பருப்பு, போட்டு பொன்நிறமானவுடன் அடுப்பை அனைத்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை கலந்து ஊறிய அவல் போட்டு எல்லாவற்றையும் நன்கு கலந்து [இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் கெட்டியாக இருக்கனும்] இட்லி தட்டில் ஊற்றி நன்கு வேகவிட்டு எடுக்கவும். தேவை எனில் மாவில் நெய் [அ] தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கலந்து கொள்ளலாம். கையில் தொட்டால் ஒட்டாமல் நன்கு உதிராக இருக்கும். கார சட்னி சூப்பராக இருக்கும்.

Thursday, May 14, 2009

அவல் பிரியாணி

தேவையானவை:

அவல் - 200 கிராம்
அவரவர்க்கு பிடித்த காய்களும் போட்டுக் கொள்ளலாம். பொடியாகவோ, மெல்லிய நீள துண்டுகளாகவோ, நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பற்கள்
பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு வாசனைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு


செய்முறை:

அவலை 2 முறை நன்கு கழுவி, நன்கு வடியவிட்டு வைக்கவும். இருமுறை அலம்பும் போதும் தண்ணீர் ஊற்றுவதால் அதிலேயே ஊறி தண்ணீரை உறிஞ்சுகொள்ளும். தனியாக நீரூற்றி ஊறவக்க்த்தேவை இல்லை. இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்த உடனேயே இஞ்சி, பூண்டு விழுது போட்டுவிட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்கவும். வெங்காயம் சிவக்க வதங்கியபின் காய்களுடன், உப்பு போட்டு பாதி வதங்கியபின் அவலையும் போட்டு நன்கு வதக்கவும்.

அடுப்பை சிம்மில் எரியவிடவும். தேவை எனில் பிரட்டை நெய்யில் பொரித்தும் போடலாம். அவல் பிரியாணியை எளிதில் செய்து விடலாம். மேலே மல்லி இலை, புதினா இலைகளை போட்டு சாப்பிடவும். சூப்பராக இருக்கும்.

அவல் புட்டு

தேவையானவை:

அவல்- 200 கிராம்
பொடித்த வெல்லம் - 150 கிராம்
தேங்காய் துருவல் - 100 கிராம்
ஏலக்காய் பொடி - கொஞ்சம்
நெய் - கொஞ்சம்

செய்முறை:

அவலை நெய்யில் பொன் நிறமாக வறுத்து பின் மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அதனுடன் தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இது உதிராக இருக்கும். தேவை எனில் முந்திரி வறுத்து சேர்த்து கலக்கவும். சீக்கிரம் செய்து விடலாம்.[ அவலை வறுக்கும்போது சிவக்க வறுக்கவும்.

அவல் பாயசம்

தேவையானவை:

அவல் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி- 20
பால் - 2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 ஸ்பூன்
நெய் - கொஞ்சம்

செய்முறை:

நெய்யில் அவலையும் முந்திரியையும் வறுத்து மிக்ஸியில் பவுடராக செய்து 1 கப் பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அவலை வேகவிட்டு, பின் மீதி உள்ள பால் சேர்த்து கொதிக்கவிட்டு, கொஞ்சம் ஆறியபின் சர்க்கரை, ஏலக்காய்பொடி சேர்க்கவும். சுவையாக இருக்கும் இந்த பாயசத்தை சீக்கிரம் தயார் செய்து விடலாம்.

அவல் மோர் களி

தேவையானவை:


அவல் - 200 கிராம்
லேசாக புளித்த மோர் - 500 கிராம்
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/4 ஸ்பூன்
பெருங்காயதூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையானவை
ஊப்பு - ருசிக்கு ஏற்ப
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்

செய்முறை:


அவலை மிக்ஸியில் நன்கு பொடிசெய்து கொள்ளவும். அதில் மோரை கலந்து ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், தேவைஎனில் உளுத்தம்பருப்பு, கடலைபருப்பும் தாளித்து கொள்ளலாம். ஊறிய அவலில் உப்பும் போட்டு நன்றாக கலந்து கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது மோர் கலந்து வாணலியில் ஊற்றி கெட்டியாகும் வரை போட்டு கிளறவும். கையில் ஒட்டாமல் வந்ததும் வாசனைக்கு 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடலாம். மோர் மிளகாய் இருந்தால் தாளிக்கும்போது போடலாம். வாசனையாக இருக்கும்.

தயிர் பூரி

தேவையானவை:

மைதா - 100 கிராம்
ரவை - 2 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1
சாட் மசாலா பொடி- 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன்
கெட்டியான தயிர் - 1 கப்
மல்லி இலை - கொஞ்சம்
புதினா இலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பூரி பொரிக்க எண்ணெய்
ஓமம் - கொஞ்சம்


செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். புதினா, மல்லி இலையுடன் கொஞ்சம் உப்பு, 1 மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மைதாவுடன் ரவை, உப்பு கலந்து கெட்டியாக பிசைந்து பூரியாக பொரித்து கொள்ளவும். கிண்ணத்தில் பூரிகளை உதிர்த்து போட்டு, அதனுடன் உருளைகிழங்கு, புதினா, மல்லி பேஸ்ட், ஓமம், சாட் பொடி, காரபொடி, தயிர் உப்பு எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே கொஞ்சம் மல்லி இலைகளை தூவி சாப்பிடவும்.

Wednesday, May 13, 2009

உழுந்து பச்சடி

தேவையானவை: 

வெள்ளை உளுந்து- 1/4 கப்,
தயிர் - 1 கப்
தாளிக்க எண்ணெய் - 2 ஸ்பூன், கடுகு - கொஞ்சம்,
பெருங்காய தூள் - கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு- தேவையானது.

செய்முறை:

உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும், பெருங்காயம், வரமிளகாய் போட்டு அடுப்பை அணைத்து ஆறியபின் அதில் உளுந்து பொடி, தயிர், ஊப்பு,போட்டு நன்கு கலக்கவும். சூப்பர் வாசனையுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். தோசைக்கும் நன்றாக இருக்கும்.

தயிர் சாதம்

தேவையானவை: 

பச்சரிசி - 2 கப்
தயிர் - 2 கப்
கொட்டை இல்லாத திராட்சை- 20
மாதுளை முத்துக்கள்- 1/4 கப்
ஆப்பிள் சிறிய துண்டுகளாக - 10
புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள்- 10
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது- 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி- பொடியாக 1/2 ஸ்பூன்
முந்திரி பொடியாக - 2 ஸ்பூன்
தாளிக்க- கடுகு, பெருங்காயம்- கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம் உப்பு.

செய்முறை: 

அரிசியை நன்கு அலம்பி 6 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விடவும். ஆறியபின் பெரிய கிண்ணத்தில் போட்டு, மேலே கூறி உள்ள எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து , கடுகு, பெருங்காயம் தாளித்து தயிரையும் ஊற்றி நன்கு கலந்து, மேலே கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு கொள்ளவும். கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கொள்ளலாம் சூப்பராக இருக்கும். இதற்கு தொட்டு கொள்ள வறுத்த மோர் மிளகாய், அல்லது மாவடு இருந்தால் சுவை சூப்பர்தான்.

மணத்தக்காளி பச்சடி

தேவையானவை: 

மணத்தக்காளி வற்றல்- 1/4 கப்
தயிர்- 2 கப்
பெருங்காயதூள்- கொஞ்சம்
வரமிளகாய்- 4
உப்பு கொஞ்சம்,
கறிவேப்பிலை கொஞ்சம்
எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: 

வற்றலை எண்ணெய் விட்டு பொரிய வறுத்து கொள்ளவும். இன்னும் கொஞ்சம் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், பெருங்காயம் வறுத்து ஆறியபின் அதில் தயிர், மணத்தக்காளி வற்றல் போட்டு நன்கு கலந்து சாப்பிடவும். வற்றலில் உப்பு இருப்பதால் பார்த்து உப்பு போடவும். கறிவேப்பிலை மேலே போடவும். இந்த பச்சடி பித்ததுக்கு ரொம்ப நல்லது. வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும். வயிற்றுபுண் இருந்தால் ஆற்றும்.

காய்கறி பச்சடி

தேவையானவை:

கேரட்- 1
வெள்ளரிக்காய்- 1
வெள்ளை பூசணி- 1 கீற்று
செள செள - சிறியது
கோஸ்- 50 கிராம்
குடை மிளகாய்- 1
பெரிய வெங்காயம்- 1
தேங்காய் துறுவல் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
உப்பு- தேவையானவை;
தேவையானால் பெங்களூர் தக்காளி- 3
தாளிக்க கடுகு.
தேங்காயுடன், மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.


செய்முறை:

எல்லா காய்களையும் நன்கு சுத்தம் செய்து துறுவி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், பெருங்காயத்தை போட்டு அடுப்பை அணைத்து விடவும். அதில் துறுவிய காய்களுடன் அரைத்ததேங்காய் உப்பு போட்டு, தயிறும் ஊற்றி, கடைசியில் பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி போட்டு, அதனுடன் மல்லி இலை, தக்காளி பொடியாக நறுக்கி நன்கு கலக்கவும். இந்த பச்சடியை கப்பில் போட்டும் சாப்பிடலாம். சப்பாத்திக்கு, தோசைவகைகள், உப்புமா எல்லாவற்றுக்கும் தொட்டு சாப்பிடலாம். சூப்பராக இருக்கும்.

கீரை தயிர் கூட்டு

தேவையானவை: 

பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 1 கப்
தயிர்- 1 கப்
தேங்காய் துறுவியது - கொஞ்சம்
பச்சை மிளகாய்- 2
மிளகு- 1/4 ஸ்பூன்
ஊளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிய கட்டி
தாளிக்க- கடுகு, சுவைக்கு ஏற்ப உப்பு.

செய்முறை:

கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஊளுத்தம்பருப்பு, தேங்காய், பெருங்காயம், மிளகு, மிளகாய், பொன் நிறத்தில் வறுத்து ஆறியபின் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கீரை நன்கு பொடியாக நறுக்கி கொண்டு, மண் போக சுத்தம் செய்து வாணலியில் அரைத்ததுடன் கீரையை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். ஆறியபின் தயிர், உப்பும் சேர்த்து நன்கு கலக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். சுவையான தயிர் கூட்டு தயார்.