Thursday, July 30, 2009

டிப்ஸ்

  1. அவசரமாக ரசம் செய்ய வேண்டுமா 2 நபர்க்கு- மிளகு - 1 ஸ்பூன், சீரகம் - 1ஸ்பூன், தனியா - 1 ஸ்பூன், வரமிளகாய் - 3 புளி எலுமிச்சை அளவு. உப்பு தேவையானது.கடுகு- தாளிக்க கொஞ்சம், மஞ்சள்பொடி - கொஞ்சம், பெருங்காயம் - கொஞ்சம். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா, மிளகாய், புளியை லேசாக சூடு செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிவந்த பின் , நன்கு ஆறியபின் உப்பு போட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத்து கொண்டபின், வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, மஞ்சள்பொடி, பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தபின் இறக்கி கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால் சூப்பரான ரசம் ரெடி. நெய்யில் தாளித்தால் ரசம் சூப்பராக இருக்கும்.
     
  2. சட்னி செய்ய பருப்புகள் இல்லையெனில் கவலை வேண்டாம். தக்காளி சட்னி செய்ய வேண்டும் எனில் தக்காளி, வெங்காயம்[ சிறிய, பெரிய] எதுவாக இருந்தாலும் சரி, லேசாக வதக்கி ஆறியபின் இட்லி பொடி இருந்தால் 2 ஸ்பூன் அல்லது தேவையான அளவு போட்டு காரம் அதிகம் தேவைஎனில் வரமிளகாய் [அ] பச்சைமிளகாய் சேர்த்து அத்துடன் தேங்காய் இருந்தால் 2 ஸ்பூன் போடலாம் இல்லையெனில் தேவையில்லை. உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் அரைத்தால் சட்னி தயார். இதில் சிறிய துண்டு பீட்ரூட், கேரட், பொடியாக நறுக்கி போட்டு வதக்கினால் காய்கறி சட்னி தயார். சாப்பாட்டுக்கு தேவை எனில் கொஞ்சம் புளி சேர்த்து அரைக்க வேண்டும்.டிபனுக்கு எனில் புளி வேண்டாம்.
     
  3. ரவை - 1 கப் எனில், அரிசி மாவு- 1/4 கப், பச்சைமிளகாய் - 2 இஞ்சி - சிறிய துண்டு பெரியவெங்காயம் - 1 பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்துக்கு கரைத்து , உப்பும் சேர்த்து கொஞ்சம் தடிமனாக ஊற்றவும். அடுப்பை சிம்மில் எரிய விட்டு செய்தால் பொன் நிறமாக இருக்கும்.மொறு, மொறுப்பாகவும் இருக்கும். தொட்டு கொள்ள தயிரில் கடுகு தாளித்து சாப்பிடலாம்.
     
  4. கத்தரிக்காய் பச்சடி செய்ய கொஞ்சம் வாணலியில் எண்ணெய் ( 1 ஸ்பூன்) எண்ணெய் ஊற்றி கத்தரிக்காயை போட்டு மூடி வைத்தால் சீக்கிரம் வதங்கி விடும்.இப்படி செய்தாலும் சுட்ட வாசனை இருக்கும். ஆறிய பின் எடுத்து தோல் உரித்து கையினால் மசித்து கொண்டு எண்ணெயில் கடுகு,பெருங்காயம் 4 -வரமிளகாய் தாளித்து 100 கிராம் தயிரில் போட்டு, அதில் கத்தரிக்காயை கலந்தால் பச்சடி தயார்.இதுபோல் எந்த காய்களிலும் செய்யலாம். காய்களை வதக்கனும் அப்போதுதான் பச்சடியின் வாசனை வரும்.
     
  5. முதல் நாள் இரவு வைத்த சாதம் எனில் காலையில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம்,வறுப்பட்டபின் பெரியவெங்காயம் -2 பச்சைமிளகாய் 4 (அ) வரமிளகாய் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை பொடியாக நறுக்கி போட்டு தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் எரியவிட்டு சாதத்தை போட்டு வதக்கினால் வெங்காய சாதம் ரெடி. சூப்பராக இருக்கும். தேவை எனில் குடமிளகாயை பொடியாக நறுக்கி போட்டு கலக்கலாம். கேரட்டை துருவி மேலே போட்டு சாப்பிடலாம்.எதுவுமே அவசரத்துக்கு இல்லையெனில் கொஞ்சம் மிளகு, சீரகத்தை பொடிசெய்து சாதத்தில் கலந்து வதக்கலாம்.
     
  6. பீர்க்கங்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவி, பச்சை மிளகாய்சேர்த்து வதக்கி உப்பு போட்டு தயிரில் கலந்தால், பீர்க்கங்காய் தயிர் பச்சடி தயார்.

Thursday, July 23, 2009

காய்கறி கூட்டு

தேவையானவை


பூசணி
அவரை
கோஸ்
பரங்கி
கத்தரிக்காய்
கொத்தவரங்காய்
பாசிப்பருப்பு - 1/2 கப்
பச்சைமிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்,
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
தாளிக்க எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை

பாசிப்பருப்புடன் மஞ்சள்பொடி சேர்த்து மலர வேகவிடவும். தேங்காயுடன் 2 பச்சைமிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். காய்களை பொடியாக நறுக்கி கொள்ளவும். நன்கு சுத்தம் செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். அதில் மிளகாயை கீறி போடவும். பாதி வெந்தபின் உப்பு போட்டு, வெந்தபருப்பு, அரைத்துவிட்ட தேங்காயை போட்டு, கெட்டியாக இருந்தால் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இறக்கிவிட்டு நெய்யில் [அ] தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். நன்கு கலந்து விடவும்.இதற்கு தக்காளி, எலுமிச்சை தேவை இல்லை. எல்லா காய்கள், பருப்பு ஒன்றாக போட்டு ஃப்ரஷர் பேனிலும் ஒரு விசில் விட்டு பின், தாளிக்கலாம். எல்லா காய்களும் சேர்க்கலாம். சத்துள்ளது.

பாசிப்பருப்பு கடையல் (தால்)

தேவையானவை

பாசிப்பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2 [அ] 3
பச்சைமிளகாய் - 4
கேரட் - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் [அ] சிட்ரிக் ஆசிட் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு -
தாளிக்க - எண்ணெய், கடுகு, சீரகம்,
கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்

செய்முறை - 1

பாசிப்பருப்பை 1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு குக்கரில் மூடி போட்ட டிபன் பாக்ஸில் போட்டு வேகவிட்டால் பொங்காது. குழையாது. ஒரு விசில் விட்டு அணைக்கவும். இல்லையெனில் தனியாகவும் மலர வேகவிடலாம். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மிளகாயை கீறிபோடவும். கேரட்டை பொடியாக நறுக்கி வதக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி போடவும். மூடி வேக விடவும். சீக்கிரம் வெந்துவிடும். உப்பு போட்டு வெந்த பருப்பையும் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மேலே கறிவேப்பிலை, மல்லி தூவி இறக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு, [அ] சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். எலுமிச்சை பழம் இல்லையெனில் சிட்ரிக் ஆசிட் சேர்க்கலாம்.

செய்முறை - 2

குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மிளகாய், கேரட், தக்காளி, மஞ்சள்பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி தம்மிலும் வைக்கலாம். எந்த வகையில் செய்தாலும் பாசிப்பருப்பை கொஞ்ச நேரம் (15 நிமிடம்) ஊற விட்டால் சீக்கிரம் வேகும். 1 விசில் விட்டால் போதும். கடைசியில் கடுகு, சீரகம் 1 ஸ்பூன் நெய்யில் [அ] தேங்காய் எண்ணெயில் தாளித்தால் நல்ல வாசனையாக இருக்கும். எந்த டால் செய்தாலும் இறக்கி விட்டு எலுமிச்சைசாறு பிழியனும். முதலிலேயே பிழிந்தால் தால் கசந்து போகும். இந்த தால் சாப்பாட்டுக்கும், சப்பாத்தி, டிபனுக்கும் சுவையாக இருக்கும்.

Wednesday, July 22, 2009

பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை :

பச்சைமிளகாய் - 1/2 கிலோ,
தனியா பொடி - 1/4 கப்,
மஞ்சள்பொடி - 2 ஸ்பூன்,
வினிகர் - 1/4 கப்
வறுத்து பொடி செய்த கடுகு - 1/2 கப்
வெந்தயம் - 2 ஸ்பூன்
கல் உப்பு - தேவையானவை
நல்லெண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை : 

எல்லா பொடிகளையும் வினிகரில் கலந்து கொள்ளவும். மிளகாயை சுத்தம் செய்து நீளமாக கீறி பொடியை அடைக்கவும். மேலே எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும். 4 நாட்களில் நன்கு ஊறி சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல உறைப்புடனும் இருக்கும்.

டிப்ஸ்

1. தோசை மாவு குறைவாக இருந்தால் தேவையான சாதத்தை மிக்ஸியில் அரைத்து, அதனுடன் இருக்கும் மாவையும் ஊற்றி ஒரு சுற்று சுற்றவும். நன்கு கலந்துவிடும். அதில் தோசை வார்த்தால் நன்கு முறுகலான தோசை வரும்.

2. கொழுக்கட்டைக்கு மாவுக்கு 1 டம்ளர் அரிசிக்கு 1 ஸ்பூன் ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் கொழுக்கட்டை விரியாமல் அழகாக வரும்.

3. சாம்பாரில் உப்பு அதிகம் ஆகிவிட்டால் 4 தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். இல்லையெனில் கொஞ்சம் தேங்காயுடன் 1 ஸ்பூன் மல்லி[ தனியாவை] மிக்ஸியில் அரைத்து கலந்தாலும் உப்பு குறையும். உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி வேகவிட்டு சாம்பாரில் போடலாம். பரிமாறும் சமயம் உப்பு அதிகம் இருந்தால் உடனே ஒரு கப் பால் கலந்து பரிமாறவும். ஆனால் பால் கலப்பதால் இந்த சாம்பாரை உடனே சாப்பிட்டுடனும். அதிக நேரம் இருந்தால் கெட்டு விடும். அதனால் பரிமாறும் அளவுக்கு சாம்பாரில் பால் கலந்து கொள்ளலாம்.

4. சாதம் குழைவாக வேண்டும் என்று விரும்பினால அரிசியை 1 மணி நேரம் முன்பாகவே நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். அடுப்பை சிம்மில் எரியவிட்டு 1பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கலாம். உதிராக வேண்டும் எனில் 1பங்கு அரிசிக்கு 2/12 அளவு தண்ணீர் சேர்க்கலாம். அரிசி ஊறுவதால சாதம் குழையாது. உதிராகவும் இருக்கும். சாப்டாகவும் இருக்கும்.

5. உளுந்து வடை செய்யும் போது தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் தேவையான அளவு அவலை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கலந்து வடை தட்டவும். உப்பு போட மறக்க வேண்டாம்.

6. பாகற்க்காய் பொரியலுக்கு [ கசப்பு சுவை பிடிக்காதவர்கள்] நறுக்கி கொஞ்ச மஞ்சள்பொடி, உப்பு, புளிசாறு [அ] 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஊறவைத்து 1/2 மணி நேரம் கழித்து பொரியலோ, அதில் எது செய்தாலும் கசக்காது.

7. சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவை வறுத்து அதிகமான தண்ணீர் ஊற்றி பாதி வேகும் சமயம் அடுப்பை அணைத்து குளிர்ந்த தண்ணீர் 2 டம்ளர் ஊற்றி கலந்து வடிக்கவிட்டு செய்தால பாயசம் குழையாமல் சேமியாவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் சேமியா பாயசம் சூப்பராக இருக்கும்.

8. சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு கிரேவி செய்தால் முதலில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தபின் சிம்மில் எரிய விடவும். 1 ஸ்பூன் சர்க்கரை போட்டு கரைந்து பொன்கலரில் வரும் போது தக்காளி, வெங்காயம் என்று அவரவர் செய்யும்படி செய்யவும். இப்படி செய்யும்போது கலரும் வரும். டேஸ்டும் சூப்பராக இருக்கும்.

9. வெண்டைக்காயை பொரியல் செய்ய சிறிது நேரம் முன்பாகவே நறுக்கி தட்டில் பரப்பி ஃபிரிஜ்ஜில், [அ] வெயில் இருந்தால் கொஞ்ச நேரம் வைத்து பொரியல் செய்தால் சீக்கிரமும் வதங்கிடும். எண்ணெயும் குறைவாக ஆகும். வழுவழுப்பும் இருக்காது.

10. பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் குறுனையாக உடைத்து குக்கரில் பாலும் தண்ணீரும் கலந்து நன்கு வேகவிட்டு, வெந்தபின் மேலும் பால் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

11. குருமா, பிரியாணிக்கு முதலில் வாசனை பொருட்களை போட்டு, வெங்காயத்தை சேர்த்து வதங்கியபின் பூண்டை சேர்த்து வதக்கினால் வாசனை நன்றாக இருக்கும். முதலிலேயே பூண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்து கருகிவிடும்.

12. பஜ்ஜி செய்யும் போது கடலைமாவு- 1 கப், அரிசி மாவு- 1/2 கப், பொட்டுகடலை மாவு- 1/2 கப் அளவில் போட்டு நன்கு தேவையான ஊப்பு, மிளகாய் பொடி,பெருங்காய பொடி, தேவையான தண்ணீர் கலந்து பஜ்ஜி செய்தால் நன்கு உப்பி வரும்.

13. பயறுகள், பருப்புகளை ஊற விடும் போது 2 முறை நன்கு கழுவிய பின் ஊற வைக்கவும். வேகவிடும்போது அந்த தண்ணீரை ஊற்றி விட்டு புது தண்ணீரில் வேக வைக்கவும்.