Thursday, May 29, 2008

சேமியா மசாலா உப்புமா

தேவையானவை:

மெல்லிய (அணில்) சேமியா - 1 பாக்கெட் - 200கிராம்
பெரிய வெங்காயம் - 3
பட்டை- 1, லவங்கம்- 2, ஏலக்காய்-2
தக்காளி - சிறியதாக இருந்தால்-5,
பச்சை மிளகாய் - 6,
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 ஸ்பூன்
பிடித்த காய்கள் - மெல்லியதாக நீளமாக நறுக்கியது- 100 கிராம்,
குடமிளகாய்- 1
உப்பு- தேவையானது,
எண்ணெய்-தேவையானது

செய்முறை:

வறுத்த சேமியாவே கிடைக்குது, சேமியா 1பங்குக்கு 2 பங்கு தண்ணீர் தேவை. வாணலியில் கடுகு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு லேசாக வறுபட்டபின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு கொஞ்சம் வதங்கிய பின் காய்களை போட்டு 1 நிமிடம் வதக்கி தண்ணீர் ஊற்றி உப்பும் போட்டு கொதி வரும்போது சேமியாவை போட்டு கிளறவும். சேமியா வேகும்போது காய்களும் நன்கு வெந்துவிடும். தண்ணீர் தேவையான அளவு மட்டுமே ஊற்ற வேண்டும். ஜாஸ்தி ஆனால் கொஞ்சம் சேமியாவை போட்டு கிளறவும். இல்லையெனில் தண்ணீர் கொதிக்கும் சமயம் கொஞ்சம் எடுத்து வைத்து தேவைஎனில் ஊற்றி கொள்ளலாம். அதிகம் ஆனால் சேமியா இல்லையெனில் கொஞ்சம் ரவை இருந்தால் போட்டு கொள்ளலாம். தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம். இல்லையெனில் மிக்ஸியில் 1 நிமிடம் அரைத்தும் போடலாம்.

அரிசி ரவை உப்புமா

தேவையானவை:

பச்சரிசி/புழுங்கல் அரிசி- 1 டம்ளர்,
துவரம் பருப்பு- 25 கிராம்,
கடலை பருப்பு- 25 கிராம்,
மிளகு- 1/2 ஸ்பூன், சீரகம்- 1/2 ஸ்பூன்,
கல் உப்பு- 1 ஸ்பூன், தேவைஎனில் சேர்த்து கொள்ளலாம்.
வர மிளகாய்-2,
எண்ணெய்- கொஞ்சம்,

செய்முறை:

மேலே கூறி உள்ள பொருட்கள் +அரிசி, பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து [ குருனையாக] கொள்ளவும். குருனை 1 பங்குக்கு 2-1/2 பங்கு தண்ணீர் வேண்டும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து [தேவை எனில்] 3 ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது குருனை தூவியபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விட்டு நன்கு வேக விடவும். சிறிய குக்கரில் செய்வதாக இருந்தால் ரவையை போட்டபின் மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். மிளகு, சீரக வாசனையுடன் உப்புமா சூப்பராக இருக்கும். தேவை எனில் 1 ஸ்பூன் நெய் விட்டு கொள்ளலாம்.

ரவா கிச்சடி

தேவையானவை:

ரவை- 200 கிராம்,
மெல்லிய [அணில்] சேமியா- 200 கிராம்,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-6 [அ] 8,
கேரட்-1, பீன்ஸ்-10, பீட்ரூட்- 1, குடமிளகாய்-1,பச்சை பட்டாணி- 25 கிராம்,
காலிஃப்ளவர்- சிறிய பூக்களாக - 50 கிராம்,
உப்பு- தேவைக்கு.
எண்ணெய்- 50 கிராம்,

செய்முறை:

ரவை மட்டும் வறுத்து கொள்ளவும். சேமியா வறுத்ததே கிடைப்பதால் வறுக்க வேண்டாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து [ காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.] மேலே கூறி உள்ளதை போட்டு நன்கு வதக்கி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது சேமியாவை போட்டு 1 நிமிடம் கழித்து ரவை போட்டு கட்டி விழாமல் கிளறவும். [பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.] சிம்மில் வைத்து மூடி வேக விடவும். 5 நிமிடத்தில் வெந்து விடும்.

தக்காளி பாத்

தேவையானவை:

ரவை- 2 கிராம்,
தக்காளி- 3[அ] 5,
பெரிய வெங்காயம்-1,
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
சீரகம்- 1/4 ஸ்பூன்,
பட்டை-1, லவங்கம்-2 ஏலக்காய்-2,
மஞ்சள்பொடி- 1/4 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு.

செய்முறை:

ரவை பொன் கலரில் வறுத்து கொள்ளவும். தக்காளியை சுடு நீரில் போட்டு ஆறிய பின் அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் தண்ணீரும் கலந்தால் 2 பங்குதான் இருக்கனும். வாணலியில் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, லவங்க,ஏலக்காய்,மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி தக்காளி+ தண்ணீர் சேர்த்து கொதி வரும்போது ரவையை போட்டு கிளறவும். சிம்மில் வைத்தால் 2 நிமிடத்தில் நன்கு வெந்து விடும். மேலே குடமிளகாய், மிக்ஸர் தூவி சாப்பிடலாம். சுவையாக இருக்கும். உப்புமாவுக்கு 2 பங்கு தண்ணீர் தான் வேண்டும். அப்போதுதான் உதிராக இருக்கும்.

Wednesday, May 28, 2008

அவல் உப்புமா

தேவையானவை:

கெட்டியான அவல்- 1 கப்,
பெரிய வெங்காயம்-2,
பச்சை மிளகாய்-5,
இஞ்சி- சிறிய துண்டு,
தேவையான காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும்-1 கப்
தக்காளி-2, பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உப்பு- தேவையானவை.
எண்ணெய்- தேவையானது.

செய்முறை:

அவலை மிக்ஸியில் ரவையாக உடைத்து 2 முறை கழுவி உடனே சுத்தமாக தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். அதனுள் இருக்கும் நீரே ஊற போதும். கொஞ்ச நேரத்தில் ஊறி கையில் எடுத்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து பொன் கலர் ஆனவுடன் மேலே கூறி இருக்கும் எல்லாவற்றையும் போட்டு 1 நிமிடம் வதக்கி, அதனுடன் அவலையும் சேர்த்து வதக்கவும்.தண்ணீரை வடியவிட்டு ஊற வைப்பதால் ரவை ஊறும் அளவுக்குதான் தண்ணீர் இருக்கும். மூடி வைத்து 1 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து இருக்கும்.

இட்லி உப்புமா

தேவையானவை:

இட்லி- 10,
பெரிய வெங்காயம்-2,
இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-5,
பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்
உப்பு- கொஞ்சம்,

செய்முறை:

இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1 நிமிடம் வதக்கவும். கொஞ்சநேரம் வதங்கினால் போதும். பின் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கவும். முதலிலேயே இட்லி வெந்து இருப்பதால் அதிக நேரம் விட வேண்டாம். இட்லி கையில் ஒட்டாமல் இருக்க கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொண்டு உதிர்க்கலாம்.

Tuesday, May 27, 2008

ரவா உப்புமா

தேவையான பொருள்கள்:

ரவை - 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 ,
இஞ்சி- சிறியதுண்டு,
பச்சை மிளகாய்-5,
உப்பு- தேவையானவை,
கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.
தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.

செய்முறை:

ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச நேரத்தில் வதங்கி விடும். 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவைபோட்டு சிம்மில் வைத்து கட்டி விழாமல் கிளறி தீயை குறைத்து 5 நிமிடம் வைத்தால் நன்கு வெந்து விடும். கடைசியில் கறிவேப்பிலை, மல்லி போட்டு சாப்பிடவும். சுவையான, மணமுள்ள ரவா உப்புமா ரெடி.

அரிசி ரவை மிளகு உப்புமா

தேவையான பொருள்கள்:

பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
கடலைபருப்பு-2 ஸ்பூன்,
சீரகம்-1/4 ஸ்பூன்,
மிளகு--1 ஸ்பூன்,
வரமிளகாய்- 4,
துறுவிய தேங்காய்- கொஞ்சம்,
உப்பு- தேவையான அளவு.
பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,
கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.

செய்முறை:

அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும். அதை அளந்து கொண்டு 1 கப்புக்கு, 2 கப் தண்ணீர் ஊற்றனும். கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் தேங்காய்,உப்பு சேர்த்து வதக்கவும். ரவையின் அளவுக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதி வரும்போது ரவையை போட்டு கட்டி தட்டாமல் கிளறி சிம்மில் மூடி வைத்து 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்து இருக்கும். மேலே கறிவேப்பிலை, மல்லி போட்டு கலந்து சாப்பிடவும். வறுத்து செய்வதால் நல்ல வாசனையுடன் இருக்கும். ப்ரஷர் பேனில் செய்வதாக இருந்தால் 1 விசில் விட்டு இறக்கவும்.

Monday, May 26, 2008

வெஜிடபுள் உப்புமா

தேவையானவை:

ரவை- 1 கப் பொன் கலரில் வறுத்துகொள்ள வேண்டும்
பிடித்த காய்கள் எல்லாவற்றையும் சேர்க்கலாம்.
பட்டை-1
லவங்கம்-2
ஏலக்காய்-2
இஞ்சி- பொடியாக 1 ஸ்பூன், பூண்டு - 10 பற்கள்
சோம்பு-1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
உப்பு- தேவையானது, எண்ணெய் தேவையானவை.

செய்முறை:

மசாலா பொருள்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொண்டு, வாணலியில் கடுகு போட்டு வெடித்தபின் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி காய்கள்,பச்சை மிளகாய், உப்பு,இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கியபின் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வரும் சமயம் ரவைபோட்டு நன்கு கிளறி மூடி வைத்து சிம்மில் அடுப்பை எரியவிட்டால் 5 நிமிடத்தில் எல்லாம் நன்கு வெந்துவிடும்.கம, கம வாசனையுடன் வெஜிடபுள் உப்புமா தயார்.

ரவா குஸ்கா

தேவையானவை:

ரவை- 1 கப்,
பெரிய வெங்காயம்- 2 நீளமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்,
இஞ்சி, பூண்டு விழுது- 2 ஸ்பூன்,
பச்சை மிளகாய்- 5 கீறி கொள்ளவும்,
பட்டை-1 லவங்கம்-2
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
தேங்காய் பால் -2 கப், [அ] சாதாரணபாலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின் பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு விழுது போட்டு நன்கு வதங்கியபின் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கியபின் தேங்காய் பால் ஊற்றி கொதி வரும்போது உப்பும் ரவையும் போட்டு கிளறவும். 2 நிமிடத்தில் நன்கு வெந்துவிடும். ரவை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்து கொண்டு விடவும். வறுப்பதால் வாசனையாகவும். குழையாமலும் வரும். 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்.ரவை குஸ்கா ரெடி.

மிளகு, சீரக உப்புமா

தேவையானவை:

ரவை- 1 கப் [ ரவை எண்ணெய் விடாமல் வறுத்து கொள்ளவும்]
பெரிய வெங்காயம்- 1
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்
மிளகு, சீரகம்- தலா- 1 ஸ்பூன்
தண்ணீர்- 2 கப்
உப்பு கொஞ்சம்
தாளிக்க கடுகு, எண்ணெய்.

செய்முறை:

மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவேண்டும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் மிளகு, சீரகப் பொடியை போட்டு உப்பு போடவும். பின் தண்ணீர் ஊற்றி கொதி வரும் சமயம் ரவை தூவினபடி போட்டு கட்டி தட்டாமல் கிளறி தட்டை போட்டு மூடி வைத்து விட்டால் 5 நிமிடத்தில் வெந்துவிடும்.இந்த உப்புமா மிளகு, சீரகபொடி வாசனையுடன் சூப்பர் சுவையாக இருக்கும்.

உப்புமா வகைகள்

உப்புமாவை ருசியாக செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை ருசியாக செய்யகூடிய பக்குவம் தெரியாததால் பலரும் செய்வது இல்லை. உப்புமா என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதை சரியானபடி, வெவ்வேறு சுவைகளில் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவை உதிராக சாப்பிடுபவர்களும் உண்டு. கொஞ்சம் குழைவாக சாப்பிடுபவர்களும் உண்டு. உதிராக வேண்டும் என்றால் 1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். குழைவாக வேண்டும் எனில் 2, 1/2 பங்கு என்ற அளவில் ஊற்ற வேண்டும். தண்ணீர் கொதி வரும்போது அடுப்பை சிறியதாக எரியவிட்டு ரவைபோட்டு கிளறினால் கட்டி தட்டாது.இறக்கியபின் 1 ஸ்பூன் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறினால் சூப்பர் வாசனையுடன் இருக்கும்.

கோதுமை ரவை உப்புமா



தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பிடித்த காய்கள் பொடியாக நறுக்கியது- 1 கப்
பச்சை மிளகாய்-4, பெரிய வெங்காயம்- 1 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்
இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
எண்ணெய்- கொஞ்சம்
உப்பு தேவையானது

செய்முறை:

ப்ரஷர் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு பொன் கலர் ஆனபின் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதங்கியபின் காய்கள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு ஒரு கிளறு கிளறி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் உப்பு போட்டு ரவையை தூவியபடி போட்டு கிளறி ப்ரஷர் பேனை மூடி வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, சிறிது நேரம் கழித்து திறந்து மேலே கொஞ்சம் நெய் [அ] தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிடவும். சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

உப்புமா வகைகள்

திடீரென்று விருந்தாளிகள் வந்தாலோ, நமக்கே பசித்தாலோ உப்புமாவை உடனடியாக செய்யலாம். சில பேர் அதை பக்குவமாக செய்ய தெரியாதலால் உப்புமாவை பலரும் விரும்புவதில்லை. ருசியாக செய்தால் பலரும் விரும்பி சாப்பிடகூடிய உணவு. அதை ஒரே மாதிரியாக செய்யாமல் பல வகையாக செய்யலாம். செய்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உப்புமா உதிராக வர ரவையை வெறும் வாணலியில் பொன் கலரில் வறுத்துக் கொள்ளவேண்டும்.

ரவை ஒரு பங்கு எனில் தண்ணீர் 2 பங்கு என்ற அளவில்தான் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதி வந்ததும் ரவை தூவினபடி போடனும். அப்போதுதான் கட்டி தட்டாது. ரவையை போடும் போது அடுப்பை சிறியதாக எரியவிடவும். இதுபோல் செய்தால் கட்டி தட்டாமல் வரும். இறக்கும்போது 1 ஸ்பூன் நெய், [அ] தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் சுவையாக இருக்கும். உப்புமாவை விரும்பாதவர்கள் கூட ருசியாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

1.அரிசி புளி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு [ புழுங்கல்,பச்சை அரிசி] எதுவாக இருந்தாலும் பரவாயில்லை - 2 கப்
தண்ணீர்-2கப்
புளி கரைசல்- 1/2 கப்
நல்லெண்ணெய்-தேவையான அளவு
கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு- தலா- 1 ஸ்பூன்
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவைனயானது
மோர் மிளகாய்-6
கறிவேப்பிலை- கொஞ்சம்

செய்முறை:

அரிசி மாவை புளி, தண்ணீரில் [ மேலே கூறிஉள்ளபடி அளவில்] கரைத்து கொண்டு, கெட்டியான வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் சேர்த்து பொன் நிறமாக ஆனதும் மோர் மிளகாய் போட்டு உப்பும் போட்டு கலந்து கரைத்துவைத்துள்ள மாவை கொட்டி கிளறவும். சிம்மில் வைத்து கிளறவேண்டும்.அப்போதுதான் தீயாது. சிம்மில் வைத்து மூடி வைத்து 2 நிமிடத்துக்கு ஒருமுறை கிளற வேண்டும்.நன்கு வெந்து பொன் கலரில் உதிராக வெந்து இருக்கும் போது இறக்கி விடவும்.கடைசியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். சூப்பராக இருக்கும்.

2.கோதுமை ரவை மசாலா உப்புமா

தேவையான பொருள்கள்:

கோதுமை ரவை- 1 கப்
தண்ணீர்- 2 கப்
பெரிய வெங்காயம்- 1
விருப்பபட்ட காய்கள்- 1 கப்
பட்டை-1, லவங்கம்-2
இஞ்சி பொடியாக நறுக்கியது-1/4 ஸ்பூன்
பூண்டு- பொடியாக நறுக்கியது-1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய்-4
எண்ணெய் தேவையானது.
உப்பு தேவையானவை.

செய்முறை:

ப்ரஷர் பேன் [அ] கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மடுகு, கடலைபருப்பு, பட்டை, லவங்கம்,போட்டு சிவந்ததும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். 2 கப் ஊற்றி உப்பு போட்டு கொதி வரும்போது ரவைபோட்டு, 1நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய காய்களை போட்டு நன்கு கலந்து சிம்மில் வைத்து ப்ரஷர் பேனை மூடி வைத்து 1 விசில் வந்தவுடன் இறக்கி விடவும். ப்ரஷர் பேனில் செய்தால் எண்ணெய் குறைவாகதான் ஆகும். காய்கறிகள் சேர்வதால் உடலுக்கு சத்துள்ளது.

3.பொடி உப்புமா

தேவையான பொருள்கள்:

அரிசி- 1 டம்ளர்,
கடலைபருப்பு- 2 ஸ்பூன்,
துவரம்பருப்பு-2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு-2 ஸ்பூன்,
வரமிளகாய்-5
பெருங்காயம்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

தாளிக்க -கடுகு,கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு தலா-1/4 ஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாக உடைத்து கொண்டு, ப்ரஷர் பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு,பெருங்காயம் தாளித்து, உடைத்த ரவையை அளந்து அதில் 2 பங்கு தண்ணீர் ஊற்றி கொதிவந்தபின் அடுப்பை சிம்மில் எரியவிட்டு ரவைபோட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.தேவையானால் தேங்காயை துறுவி போட்டு கொள்ளலாம். முதலிலேயே வறுத்து கொள்வதால் சீக்கிரம் வெந்துவிடும். வறுத்து செய்வதால் வாசனையாக இருக்கும்.

Monday, May 12, 2008

ரைஸ் கிரேவி

தேவையானவை:

கேரட்- 100 கிராம்,
சாதம்- 1 கப்,
தக்காளி-6,
பெரிய வெங்காயம்-2 ,
சோயா சாஸ்- 1 ஸ்பூன்,
கார்ன்ஃப்ளார்- 2 ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது-1 ஸ்பூன்,
உப்பு- தேவைக்கு,
பச்சை மிளகாய் - 6 [அ] 8,
பட்டை -1,
லவங்கம், ஏலக்காய் -2

செய்முறை:

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அதில் பாதியை எடுத்து கொண்டு மீதியில் கேரட்டையும், தக்காளியையும் வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் , பச்சைமிளகாயை கீறி போட்டு வதக்கி, மீதி ஊள்ள வெங்காயத்தையும் போட்டு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். அரைத்த கிரேவியை ஊற்றி உப்பு போட்டு பச்சைவாசனை போக கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் எரியவிடவும். சாதத்தை சிறிய உருண்டைகளாக உருட்டி கிரேவியில் போடடு மூடி வைத்து விடவும். கொஞ்ச நேரத்தில் உப்பு, காரம் பிடித்து இருக்கும். மேலே மல்லி இலை போடவும். 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு சாப்பிடவும். இந்த குழம்பு கொஞ்சம் தண்ணியாக இருக்கனும். அதற்கு ஏற்றபடி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

Saturday, May 10, 2008

மீல் மேக்கர் (சோயா) சப்ஜி

தேவையானவை:

சோயா- 100 கிராம்
பெரிய வெங்காயம்-1
தக்காளி-4
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு-10 பல்
மிளகாய்பொடி-2 ஸ்பூன்
சிறிய பட்டை, கொஞ்சம்- சோம்பு, 1 ஏலக்காய்
உப்பு தேவையானவை.

செய்முறை:

சோயாவை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் ஊறியபின் பிழிந்தெடுத்து பின் 2[அ] 3 முறை பச்சை நீரில் நன்கு அலசி பிழிந்து எடுக்கவும். தக்காளியை வெந்நீரில் போட்டு தோலை நீக்கி விழுதாக அரைத்து கொள்ளவும். மற்ற பொருட்களை கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் விழுதாக அரைத்து கொண்டு வாணலியில் சீரகம் தாளித்து விழுதைபோட்டு வதக்கவும். அதனுடன் சோயாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுருள வதங்கியபின் மல்லி இலை தூவி இறக்கவும்.தேவையெனில், கடைசியில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு இறக்கலாம். சோயாவை சுடுநீரில் போடும் போது உப்பு கொஞ்சம் போடவும். வதங்கும் போது கொஞ்சம் போடவும். (Divide and rule ;-)

உருளை சப்ஜி

தேவையானவை:

சிறியதாக உள்ள உருளைகிழங்கு- 1/4கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி- 1
தயிர்- 1/4 கப்
பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கியது- 1 ஸ்பூன்
மிளகாய் பொடி- 1.5 ஸ்பூன்
கறிமசால்பொடி-1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு தேவையானவை.

செய்முறை:

உருளைகிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து,இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி,பொடியாக நறுக்கிய வெங்காயத்தைபோட்டு வதக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வதக்கவும். மஞ்சள்பொடி, கறிமசால்பொடி, மிளகாய்பொடி உப்பு போட்டு நன்கு வதக்கவும். பின் உருளைகிழங்கையும் போட்டு நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது தயிரை ஊற்றி மல்லி இலை போட்டு கிளறி இறக்கவும். உருளை சப்ஜி தயார்.

தக்காளி சப்ஜி

தேவையானவை:

தக்காளி பழமாக- 1/4 கிலோ, பெரிய வெங்காயம்- 1/4 கிலோ, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு- 10 பற்கள, மிளகாய் தூள்- 2 ஸ்பூன், கறி மசால் பொடி- 1/4 ஸ்பூன் உப்பு- தேவையானது.

செய்முறை:

தக்காளியை சுடு நீரில் போட்டு தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி வதக்கவும். அதில் கொஞ்சம் எடுத்து தக்காளி விழுதுடன் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கி வதக்கவும்.

மீதம் இருக்கும் வெங்காயத்தையும் போடவும். அடுப்பை சிம்மில் எரியவிடவும். அரைத்தவிழுது, மசால்பொடி, மிளகாய்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு, கடைசியில் 1/2 [ தேவையெனில்] கார்ன்ப்ளார் மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து விட்டு கொதி வந்தவுடன் இறக்கவும்.

மிளகு பொடி

தேவையான பொருட்கள்:

மிளகு- 50 கிராம்
சீரகம்- 50 கிராம்
தனியா- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 20 இலைகள்
பெருங்காயம்- சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்.

செய்முரை:

பெருங்காயத்தை கல்லில் தட்டினால் தூளாகிவிடும். அதை வாணலியில் போட்டு பொரித்து, அதனுடன் எல்லாவற்றையும் கலந்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் பவுடராக பொடி செய்து கொள்ளவும். சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்[அ] அவரவர்க்கு பிடித்த எண்ணெய் ஊற்றி இந்த பொடியை போட்டு சாப்பிடவும். தொண்டை சம்பந்தபட்ட கோளாறுகள் வராது. சளி, கபம் கட்டாது.

சத்து மாவு

தேவையான பொருட்கள்:

கோதுமை, கம்பு, பாசி பயறு, உளுந்து, சோயா, கேழ்வரகு, பொட்டு கடலை - தலா - 100 கிராம்
பாதாம், முந்திரி, பிஸ்தா- தலா 25 கிராம்
சாப்பாட்டு புழுங்கல் அரிசி - 1/2 கிலோ

செய்முரை:

பயறுகளை முதல் நாளே சுத்தம் செய்து ஊற விட்டு இரவில ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால் நன்கு முளைவிட்டு இருக்கும். அரிசியை கழுவி சுத்தம் செய்து எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து வெயிலில் காய விட்டு மிஷினில் அரைத்து ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைத்து தேவைபடும்போது 1- ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து கொதிக்கவிட்டு பின் பால், சர்க்கரை கலந்து குடிக்கவும. இல்லையெனில் பாலுக்கு பதில் போர் கலந்தும் குடிக்கலாம். சர்க்கரை கலந்து குடிப்பவர்கள் 5 ஏலக்காய் கலந்து அரைத்து கொள்ளலாம். வெயில் காலத்தில் உப்பு போட்டு மோர் கலந்து குடித்தால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். சத்துள்ளதுகூட.

வேப்பம்பூ பொடி

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ- 1 கப்
கடலைபருப்பு- 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்- 10
பெருங்காயம்- சிறிய துண்டு
உப்பு- 1 ஸ்பூன். 

செய்முரை:

எல்லா பொருள்களையும் தனிதனியாக வறுத்து ஆறியபின் மிக்ஸியில் பொடி செய்யவும். உடலுக்கு நல்லது. [ தேவையெனில் புளிப்புக்கு 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் போட்டு பொடி செய்து கொள்ளவும்]

வேப்பிலைக் கட்டி

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை இலை-20
நார்த்தம் இலை-20
வரமிளகாய்-10
புளி- சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம்- சிறியதுண்டு
சிறிது உப்பு.

செய்முரை:

புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் பெருங்காயத்தை பொரித்து கொண்டு, மிளகாய், இலைகளை நன்கு வெயிலில் காய விட்டு மிக்ஸியில் பொடிசெய்து அதனுடன் புளி,பெருங்காயம் போட்டு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி 2 நாட்கள் வெயிலில் காய வைத்து பாட்டிலில் போட்டு வைத்து வேண்டும் போது அந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் போட்டு சாப்பிடவும்.

சுக்கு பொடி

தேவையான பொருட்கள்:

சுக்கு- 10 கிராம்
பெருங்காயம் - சிறிய துண்டு
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 20 இலைகள்
கல் உப்பு - 2 ஸ்பூன். 

செய்முரை:

சுக்கு, பெருங்காயத்தை சிறியதாக தட்டி வைத்து கொண்டு, மற்ற பொருள்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து கொண்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சுக்கு பொடி வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. வாயு சேராது. சூடான சாதத்தில் சாப்பிடவும். புளிப்பு தேவை எனில் 1/4 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட்டை பொடி செய்யும் போது போட்டு அரைத்து கொள்ளவும்.

கொப்பரை பொடி

தேவையான பொருட்கள்:

நன்கு முற்றிய தேங்காய் - 1
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்-10
கல் உப்பு- 2 ஸ்பூன்

செய்முரை:

தேங்காயை கேரட் துருவியில் துருவி கொண்டு, உளுந்துடன், பெருங்காயத்தையும் சேர்த்து, எண்ணெய் விடாமல் வறுத்து அதனுடன் தேங்காயை சேர்த்து வறுத்து கொண்டு 2 ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து வெயிலில் காயவிட்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளலாம்.

துவரம்பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு- 1- கப்
உளுத்தம்பருப்பு- 1ஸ்பூன்
கடலைபருப்பு- 1 ஸ்பூன்
வரமிளகாய்- 20
பெருங்காயம் - சிறிய துண்டு
கல் உப்பு- 3 ஸ்பூன்

செய்முரை:

பெருங்காயத்தை சிறியதாக உடைத்து கொண்டு, எல்லா பருப்புகளையும் வறுக்கும் சமயம் பெருங்காயத்தையும் போட்டால் பொரிந்து விடும். ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை இட்லிக்கு தொட்டு கொள்ளலாம். பொரியல் செய்யும் போது இந்த பொடியை கடைசியில் தூவி இறக்கலாம்.

Friday, May 9, 2008

டிப்ஸ்

எந்த பொடிகள் செய்தாலும் அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள், பூச்சிகள் வராது. பொடி செய்தவுடன் பேப்பரில் போட்டு ஆறியபின் பாட்டிலில் போட்டு வைக்கவும். சூட்டுடன் போட்டு வைத்தால் பொடிகள் சீக்கிரமே கெட்டு போய் வண்டு, பூச்சிகள் வரும். அதே போல் எந்த வகை மாவு பொருட்களையும் மிஷினில் அரைக்கும் போதும், பேப்பரில் போட்டு ஆறியபின் எடுத்து வைக்கவும்.

பொடி செய்ய வரமிளகாய் வறுக்கும் போது கடைசியில்தான் வறுக்க வேண்டும் முதலிலேயே மிளகாயை போட்டால் கறுகிவிடும். சிகப்பு கலர் வராது. மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூள் சேர்க்கவேண்டும். வாணலியின் சூட்டுக்கே வறுபட்டு விடும் ஏனெனில் அது மிஷினில் அரைத்து இருப்பதால் [ஏற்கனவே வறுபட்டு இருக்கும்]

அடை மாவு

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 கப்
பட்டாணிப் பருப்பு, துவரம்ப் பருப்பு - தலா 1 கப்
இட்லிக்கு போடும் புழுங்கல் அரிசி - 2 கப்
வரமிளகாய் - 10
சீரகம் - 2 ஸ்பூன்
கல் உப்பு- கொஞ்சம். 

செய்முரை:

இவற்றை ஒன்றாக கலந்து வெயிலில் காய வைத்து மிஷினில் குருனையாக அரைத்து [ ரவைபோல்] வைத்து கொண்டு தேவைபடும் சமயம் பெருங்காயம், கறிவேப்பிலை,பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு கொஞ்ச நேரம் ஊறவைத்து அடைகளாக ஊற்றவும். மெல்லியதாக வேண்டும் எனில் கொஞ்சம் மாவை தண்ணியாக கரைத்து கொள்ள வேண்டும். புளிப்பாக அடை வேண்டும் எனில் மோர் கலந்து [தண்ணீருக்கு பதில்] ஊறவிட்டு அடைகளாக ஊற்றவும்.

எல்லா பயறு வகைகள் கலந்தும் அடை வார்க்கலாம். உளுந்து கலப்பதால் அடை பிய்ந்து போகாமல் அழகாக வரும். மொறுகலாகவும் வரும். எல்லா பயறுகளையும் முதல் நாள் ஊற விட்டு மறுநாள் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்து 1 மணி நேரம் கழித்து பார்த்தால் நன்கு முளைவிட்டு இருக்கும் . அரிசியை மட்டும் ஊற வைத்து [ மேலே சொன்ன அதே அளவு] பயறுகளை மிக்ஸியில் அரைத்து,சீக்கிரம் மாவாகிவிடும். பின்அரிசியுடன், 10 வர மிளகாய், உப்பு, பெருங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை இஞ்சி ஒரு துண்டு போட்டு குருனையாக அரைத்து அந்த மாவில் 2- ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கல்ந்து அடைகளாக ஊற்றவும்.

Thursday, May 8, 2008

ரெடி மாவு தயாரிக்க

ரெடி மாவு தயாரிக்க: கடலை பருப்பு- 1/2 கிலோ, அரிசி- 100 கிராம், வரமிளகாய்-20, கல் உப்பு- கொஞ்சம், கட்டி பெருங்காயம்-சிறியது. இவற்றை வெய்யிலில் நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து வைத்து கொள்ளவும். தேவையான போது மாவுடன் ஒருசிட்டிகை- சமையல் சோடா கலந்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொண்டு செய்யவும்.காரம் தேவை எனில் மிளகாய் பொடி கலந்து கொள்ளவும்.

மெதுவடை செய்ய: உளுந்து 1 - கிலோ, புழுங்கல் அரிசி- 250 கிராம், உப்பு கொஞ்சம் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து கொண்டு தேவையான போது மாவை எடுத்து சப்பாத்திக்கு பிசைவதுபோல் கெட்டியாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விட்டு, அதனுடன் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி போட்டு
கறிவேப்பிலை, மல்லி இலை, கேரட்[ தேவையானால்] சேர்த்து வடைகளாக பொரித்து எடுக்கவும். புழுங்கல் அரிசி போடுவதால் வடை மொறு, மொறுப்பாகவும், சாப்டாகவும் இருக்கும். எண்ணெயும் அதிகம் குடிக்காது.

போண்டா மிக்ஸ்: கடலைபருப்பு- 1 கிலோ, புழுங்கல் அரிசி-100 கிராம், வர மிளகாய்-20 கொஞ்சம் கல் உப்பு சேர்த்து நன்கு காய வைத்து மிஷினில் அரைத்து கொள்ளவும். தேவையான மாவை எடுத்து 2 ஸ்பூன் எண்ணெய் காயவிட்டு மாவில் ஊற்றி,பெரியவெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இஞ்சி, பிடித்தமான கீரை ஏதாவது சேர்த்து தளர்வாக பிசைந்து 1நிமிடம் ஊற விடவும். உப்பு போட மறக்க வேண்டாம். மாவை கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

புளியோதரை மிக்ஸ்: புளியை சுடு நீரில் ஊறவைக்கவும்.இதனால் பேஸ்ட் அதிகம் வரும்.வேஸ்ட ஆகாது. புளி-1/2 கிலோ, கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் கடலைபருப்பு, 2 - ஸ்பூன் உளுத்தம்பருப்பு, தனியா-5 ஸ்பூன், வரமிளகாய்-25, கட்டி பெருங்காயம் போட்டு பொன் கலரில் வறுத்து பொடி செய்து கொண்டு,புளியை நன்கு கரைத்து கெட்டியாக சுண்டும் வரை கொதிக்க விட்டு அதில் 1/4 ஸ்பூன்- மஞ்சள்பொடி,கல் உப்பு , பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.கடைசியில் சிறிய கட்டி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கடைசியில் 1/4 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கவும். தேவையானபோது சாதத்தை வடித்து இந்த புளிகாய்ச்சலை போட்டு கலந்தால் புளியோதரை ரெடி.

Wednesday, May 7, 2008

சேமியா உணவு வகைகள்

இப்போது எல்லாம் வறுத்த சேமியாவே கிடைக்குது. முதலில் தேவையான தண்ணீர் கொதிக்க விட்டு கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சேமியாவைபோட்டு 1 நிமிடம் போட்டு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள மாவு வாசனை போகும்.மெல்லியதாக இருப்பதால் 1 நிமிடம் போதும். அதை தட்டில் போட்டு ஆற விடவும். இதை வைத்து பலவகை டிஷ் செய்யலாம்.

1. தேங்காய் சேமியா: கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பச்சைமிளகாய்,போட்டு நன்கு சிவந்தபின் பொஞ்சம் பெருங்காயம் போட்டு,தேவையான தேங்காய் துறுவி போட்டு வதக்கவும். இதற்குதகுந்த உப்பு சேர்க்கவும். பின் வடிய விட்ட சேமியாவை போட்டு கிளறி, மேலே கறிவேப்பிலை, மல்லி போடவும். 1/4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கடைசியில் சேர்க்கவும்.

2. எலுமிச்சை சேமியா: தேவையான எலுமிச்சைபழத்தை [நறுக்கி தண்ணீரில் போட்டு பிழிந்தால் கசப்பு வராது] கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து சிவந்தவுடன்,பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்போட்டு வதக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து,உப்பு போட்டு வதக்கி அதில் சேமியாவை போட்டு கிளறவும.மேலே கொஞ்சம் பெருங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை போட்டால எலுமிச்சைசேமியா ரெடி.

3. தக்காளி சேமியா: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெடித்தவுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் தேவையான தக்காளி, பச்சைமிளகாயைபொடியாக நறுக்கி போட்டு,கொஞ்சம் மஞ்சள்பொடி, உப்பும் போட்டு, தக்காளியின் நீர் சுண்டியபின் தேவையான அளவு சேமியாவை போட்டு நன்கு கிளறவும்.

4. மசாலா சேமியா:வாணலியில் எண்ணெய் விட்டு 1- பட்டை, 2- லவங்கம், 2-ஏலக்காய்,மராட்டிமொக்கு-1, பிரிஞ்சி இலை போட்டு வறுபட்டபின், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும், அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, 1/4 ஸ்பூன்- மல்லிபொடி, 1/4 ஸ்பூன் -மிளகாய்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி சேமியாவை போட்டு நன்கு கிளறவும். மேலே மல்லி இலை போடவும்.
கடைசியில் 1/2 ஸ்பூன் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.

5. சேமியா பிரியாணி: கெட்டியான வாணலியில் எண்ணெய் ஊற்றி 2-ப்ட்டை, 2-லவங்கம்- 2- ஏலக்காய், சிறியதாக கடல் பாசியை உதிர்த்துபோட்டு தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி போட்டு வதக்கவும். இதில் காளானை பொடியாக நறுக்கி சுத்தம் செய்து போட்டு கொள்ளலாம். உப்பு போட்டு கொஞ்ச நேரம் வதங்கியபின் சேமியாவை போட்டு கிளறவும். இதில் மசாலா போருள்களை மிக்ஸியில் அரைத்து காய்கள் வேகும்போதும் போட்டு கொள்ளலாம்.அரைத்து போடுவதாக இருந்தால் 5- சிறிய வெங்காயம், 2பல் புண்டு, 1 துண்டு இஞ்சி போட்டு அரைத்து வதக்கவும்.எண்ணெய் பிரிந்து மேலே வந்த சமயம் சேமியாவை போடனும்.


6. புளியோதரை சேமியா: வாணலியில் எண்ணெய் ஊற்றி சேமியாவை போட்டு கிளறி, புளியோதரையை போட்டு அதற்கு தேவையான உப்பு போட்டு நன்கு கலந்தால் சேமியா புளியோதரை தயார்.

7. பிஸிபேளாபாத் சேமியா: பாசிபருப்பை சிவக்க வறுத்து வேக வைத்து கொள்ளவும்.
பொடிசெய்ய: 2- ஸ்பூன் கடலை பருப்பு, 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,2- ஸ்பூன் தனியா, கொஞ்சம் கட்டி பெருங்காயம், கொஞ்சம் வெந்தயம், 4 வர மிளகாய்.
இவற்றை எண்ணெய் ஊற்றி வறுத்து, கொஞ்சம் கொப்பரை தேங்காயை துறுவி போட்டு அதனுடன் வறுத்து பொடியாக செய்து கொண்டால் பிஸிபேளாபாத் பொடி ரெடி. வெந்த பருப்புடன் இந்த பொடியை போட்டு கிளறி உப்பும் போட்டு, சேமியாவை போட்டு கிளறி எலுமிச்சை பழத்தை பிழிந்து நன்கு கிளறினால் பிஸிபேளாபாத் சேமியா ரெடி.

8. தயிர் சேமியா: கொஞ்சம் தேங்காய்,பச்சைமிளகாய்-2 , 10 கறிவேப்பிலை இலை இவற்றை மிக்ஸியில் அரைத்து கெட்டியான தயிரில், கொஞ்சம் உப்பு கலந்து அதில் [வெந்த]சேமியாவை கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் தாளித்தால் ரெடி, மல்லி இலை போட்டு சாப்பிடவும். அதில் கேரட்டை துருவி மேலே போட்டு, சாப்பிடலாம். வெள்ளரிக்காயை துருவி போட்டும் சாப்பிடலாம். காராபூந்தி தூவி சாப்பிடலாம்.

9. பொடி சேமியா: இதற்கு எந்த பொடியாக இருந்தாலும், பூண்டு பொடி, கொள்ளு பொடி, கறிவேப்பிலைபொடி, மல்லி பொடி, சாம்பார் பொடி, எதுவாக இருந்தாலும் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேமியாவை போட்டு வதக்கி உப்பு சேர்த்து விருப்பபடும் பொடி சேர்த்து கிளறி சாப்பிடவும். இதை உடனே செய்து விடலாம். இதற்கு வெங்காய தயிர் பச்சடி தொட்டு கொள்ளலாம்.

Tuesday, May 6, 2008

பலவகை இட்லி

முதலில் இட்லி பூப்போல் வர இட்லி மாவில் [இட்லி ஊற்றும் போது தேவையான மாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் அதில் கொஞ்சம் [Eno salt ] போட்டு மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றினால் மிகவும் சாப்டாக வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும் சமயம் Eno salt கலக்க வேண்டும். மாவின் பதம் மாறி போயிருந்தால் கூட இட்லி மென்மையாக இருக்கும்.

1. தயிர் இட்லி: இட்லி தேவையானதை செய்து கொண்டு, கொஞ்சம் தேங்காய், பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து,தேவையான தயிரில் கலந்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,கொஞ்சம் பெருங்காயம், தாளித்து கறிவேப்பிலை போட்டு அதில் இட்லிகளை போட்டு மேலே மல்லி இலை போட்டு சாப்பிடவும்.

2.பொடி இட்லி: தேவையான இட்லிகளை ஊற்றி கொண்டு அந்த இட்லிகளை ஒரு தட்டில் எடுத்து வைத்து மேலே கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, அதன் மேல் இட்லி பொடியை தூவி கொஞ்சம் நேரம் ஊறியபின் சாப்பிடவும்.

3.காய்கறி இட்லி: தேவையான காய்களை பொடியாக நறுக்கி கொண்டு வாணலியில் கடுகு,உளுத்தம்பருப்பு,1 பட்டை, 2 லவங்கம்,4 பல்பூண்டு,கொஞ்சம் பொடியாக நறுக்கிய இஞ்சி,பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி,பின் காய்களை போட்டு வதக்கி [ பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்துவிடும்.] 1 நிமிடம் போதும் காய்கள் நிறம் மாறாமல் இருக்கும்.பின் உப்பு போட்டு,
இட்லிகள தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு கொஞ்சம் தேவையான எண்ணெய் ஊற்றி வதக்கவும். இப்படி செய்யும் போது அது இட்லிமாதிரியே தெரியாது. ஏதோ புது வகை டிஷ் போல் இருக்கும்.

4.தக்காளி இட்லி: நன்கு பழுத்த தக்காளிகளை பொடியாக நறுக்கி கொண்டு, வாணலியில் கடுகு,1-ப்ட்டை, 3 லவங்கம்-1 ஏலக்காய்-4 பச்சைமிளகாய்பொடியாக நறுக்கி கொள்ளவும் இல்லையெனில் நீளமாக கீற்றி கொள்ளவும். உப்பு போட்டு நன்கு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வதக்கி,1/4 ஸ்பூன் கறிமசால்பொடி சேர்த்து இட்லியை தேவையான ஷேப்பில் கட் செய்து போட்டு 1 நிமிடம் வதக்கினால் போதும். தக்காளியை நன்கு வதக்கியபின் இட்லியை சேர்க்கவும்.பின் கறிவேப்பிலை, மல்லி இலை தூவி விடவும்.

5.இட்லி மஞ்சூரியன்: இட்லிகளை தேவையான ஷேப்பில் கட் செய்து வைக்கவும். அதில் 1-ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,கார்ன்ஃப்ளார் கொஞ்சம்,அரிசிமாவு கொஞ்சம்,மிளகாய்தூள்கொஞ்சம்[காரம் தேவையான அளவு] உப்பு,கரம் மசாலாபொடி கொஞ்சம் இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய விட்டு அதில் கட் செய்து வைத்துள்ள இட்லியை மாவில் தோய்த்து [டிப் செய்து ]
பொரித்து எடுக்கவும்.

6.மிளகு இட்லி: இதற்கு மினி இட்லியாக ஊற்றி கொண்டு, வாணலியில் கடுகு, தாளித்து,இட்லிகளை போட்டு வதக்கி, 1- ஸ்பூன் நெய் சேர்த்து மிளகுதூள், சீரக தூள், உப்பு போட்டு வதக்கினால் பெப்பர் இட்லி தயார்.அதன் மேல் காராபூந்தியை தூவி சாப்பிடலாம்.

7.பிரியாணி இட்லி: தேவையான காய்களை மெல்லியதாக நீளமாக நறுக்கி, கொண்டு, எண்ணெய் காய வைத்து 2-பட்டை, 2 லவங்கம்,2- ஏலக்காய்-பிரிஞ்சி இலை,பச்சைமிளகாய் நீளமாக கீறி கொள்ளவும்.இஞ்சி, பூண்டு விழுது-2 ஸ்பூன் உப்பு கொஞ்சம் போட்டு வதக்கி[இதுக்கு கொஞ்சம் வெண்ணெய் போட்டால் வாசனையாக இருக்கும்.] பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நீளமாக நறுக்கி வதக்கியபின் காய்களைபோட்டு வதக்கி,இட்லிகளை தேவையான படி கட் செய்து அதில் போட்டு வதக்கினால் பிரியாணி இட்லி தயார்.மேலே மல்லி இலை தூவிகொள்ளவும்.

8. சாம்பார் இட்லி: 1-பெரிய வெங்காயம், 4- தக்காளி, தேவையான சாம்பார்பொடி, கொஞ்சம்,மஞ்சள்தூள்,உப்பு , 1 ஸ்பூன் பொட்டுகடலை போட்டு 2-நிமிடம் வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்ததை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சிறிய வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டால் அதிரடி சாம்பார் தயார். நன்கு சுவையாக இருக்கும்.இதில் இட்லிகளை போட்டு ஊறவைத்தும் சாப்பிடலாம்.தொட்டும் சாப்பிடலாம்.