Tuesday, February 26, 2008

பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

பச்சை சுண்டைக்காய் - 1/2 கிலோ
உப்பு - 100 கிராம்
எலுமிச்சம் பழம் - 2
வர மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சை சுண்டைக்காய் கொத்தாக இருந்தால் காம்புகளை ஆய்ந்து தனிதனியாக எடுத்து நன்கு அலம்பி சுத்தமாக வைத்து கொள்ளவும். ஊறுகாய்க்கு எப்பொதுமே ஜாடி, அல்லது கெட்டியான ப்ளாஸ்டிக் பக்கெட் நல்லது. சுண்டைக்காயை போட்டு அதனுடன் உப்பு,மிளகாய்தூள், மஞ்சள்பொடிபோட்டு, எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். தினமும் கிளறி விடவும். 5 நாட்களில் நன்கு தண்ணீர் விட்டு இருக்கும். பச்சை சுண்டைக்காய் என்பதால் கடுக்கென்றுதான் இருக்கும். அதுதான் உடம்புக்கு நல்லது தினமும் 5 [அ] 10 சுண்டைக்காய் சாப்பிடலாம். வயிற்று கோளாறுகளை போக்கும். ஊறிய சுண்டைகாயை வதக்கியும் சாப்பிடலாம். மாவடு ஊறுகாய் போட்டு அதன் தண்ணீர் இருந்தால் அதில் சுண்டைக்காயை போட்டு வைக்கலாம்.

Monday, January 28, 2008

பொடி மாஸ்

கடலைப்பருப்பு [ அ] பட்டாணிப்பருப்பு [அ] நமக்கு பிடித்தபருப்பை நன்கு ஊற வைத்து அதனுடன் வரமிளகாய்[அ] பச்சை மிளகாய் உப்பு, பெருங்காயதூள் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து இட்லி வேக வைப்பதுபோல் வேக வைத்து உதிர்த்து வைத்து கொண்டு எந்த காய்களாக இருந்தாலும் பொடியாக நறுக்கி வெந்தபின் கடைசியில் இந்த பருப்பு பொடிமாஸை போட்டு நன்கு கலந்து இறக்கினால் இதுதான் பொடிமாஸ்.

இதை தேங்காய் சேர்க்கவேண்டும் என்று விரும்பினால் பருப்பை அரைத்து கடைசியில் தேங்காயை துருவி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளலாம். ஆனால் பொடிமாஸில் வெறும் பருப்பை மட்டும் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும். கடைசியில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் தாளித்தும் போடலாம். எந்த வகை கீரைகளிலும் செய்யலாம்.

Friday, January 25, 2008

பாசிப் பருப்பு மசாலா குழம்பு

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 200 கிராம்
நன்கு பழுத்த தக்காளி - 4
மிள்காய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு - பொடியாக நறுக்கியது- தலா- 1 ஸ்பூன்
உப்பு - தேவையானவை
தாளிக்க - கடுகு, சீரகம். கறிவேப்பிலை, மல்லி இலை

செய்முறை:

பாசிப்பருப்பை லேசாக வறுத்து, மஞ்சள்தூள் போட்டு ப்ரஷர் பேனில் மூடி போட்ட பாக்ஸில் வேகவிடவும். இவ்வாறு வேகவிட்டால் பொங்காது. குழையாது. சிம்மில் வைத்து 1 விசில் விட்டால் போதும். மலரவெந்து இருக்கும். அதே பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து இஞ்சி, (தேவையானால் பூண்டு போட்டு) வதக்கவும். மிளகாய்தூள், தனியாதூள் தக்காளி பொடியாக நறுக்கி கைகளால் பிசைந்து போட்டு நன்கு வதக்கவும்.உப்பு போட்டு வெந்த பருப்பை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து நுரைத்து வந்தபின் கறிவேப்பிலை, மல்லி போட்டு விடவும். தேவையானால் இறக்கியபின் 1 ஸ்பூன் வாசனைக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். இது கிராமத்து குழம்புபோல் இருக்கும். சாப்பாட்டிற்க்கும், டிபனுக்கும் ஏற்ற டிஷ்.

Thursday, January 24, 2008

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவையான பொருள்கள் :

மாகாளிக் கிழங்கு- 1/2 கிலோ
புளித்த தயிர்- 1/4 லிட்டர்
மிளகாய்தூள்- 100கிராம்
கடுகு பொடி- 1/4 கப்
உப்பு- 200கிராம்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

செய்முறை:

மாகாளிக் கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு ஊறியபின் மண் போக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, தயிரில் எல்லா பொருள்களையும் போட்டு நன்கு கலந்து அதில் கிழங்கை போட்டு ஊறவிடவும். தினமும் நன்கு கிளறி கலந்து விடவும். கைபடாமல் இருந்தால் எத்தனை மாதமோ, வருடமோ ஆனாலும் கெடாது. சாப்பிடும் போது சிறிய கிண்ணத்தில் தேவையானதை எடுத்து பயன் படுத்தவேண்டும்.

பூண்டு ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

பூண்டு- 1/4 கிலோ
புளி பேஸ்ட்- 2 ஸ்பூன்
எலுமிச்சைப் பழம்- 2
மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
கல் உப்பு- 25 கிராம்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
வெல்லம்- சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய்- 200 கிராம்
தாளிக்க கடுகு- 1 ஸ்பூன்
ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்

செய்முறை :

புளியை சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு ஊறவைத்து கெட்டியாக கரைத்து சாறு எடுத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை போட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உறித்து வைத்துள்ள பூண்டைபோட்டு 1 நிமிடம் வதக்கி, [ கொஞ்சம் வதங்கினால் போதும்] அதில் புளியை ஊற்றி [கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கிளறினால் சீக்கிரம் சுண்டி விடும். வதங்கும்போது தெளிக்காது] அதனுடன் மற்ற எல்லா பொருள்களையும் போட்டு 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து மேலே எண்ணெய் ஊற்றி ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும். கடைசியில் லெமன் சாறு சேர்க்கவும். பூண்டு அதிகமாக வதங்ககூடாது. 2 நாட்கள் கழித்து ஊறியபின் பயன்படுத்தவும். இன்னும் காரம் அதிகம் தேவைஎனில் பச்சைமிளகாய் கீறிபோட்டு கொள்ளலாம்.

Tuesday, January 22, 2008

தக்காளி-பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

நல்ல சிகப்பு கலரில் பழுத்த தக்காளி- 1/2 கிலோ
பச்சை மிளகாய்- 50 கிராம்
பெரிய வெங்காயம்- 2
எலுமிச்சம் பழம்-1
தேவையானால் மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
வெல்லம்- கொஞ்சம் ருசிக்கு
உப்பு தேவையானது.
தாளிக்க கடுகு, பெருங்காயம்- 1/4 ஸ்பூன்

செய்முறை:

தக்காளியை பொடியாக நறுக்கி கைகளால் நன்கு கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி கொண்டு, கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன் கலரில் வதக்கி,மிளகாய், மஞ்சள்தூள் சேர்க்கவும். பின் கரைத்துள்ள தக்காளியை போட்டு சுருள வதக்கவும். உப்பு, மிளகாய்பொடி, வெல்லம் சேர்த்து தேவையான எண்ணெய் ஊற்றி, கெட்டியான பின் இறக்கவும்.வெல்லம் போடுவதால் டேஸ்ட் அருமையாக இருக்கும். சீக்கிரம் செய்து விடலாம்.

Monday, January 21, 2008

பச்சை மிளகாய் ஊறுகாய்

நன்றாக காரம் சாப்பிடுபவர்கள் இந்த ஊறுகாய் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:


பச்சை மிளகாய்- 200 கிராம்
புளி- 50 கிராம்
வெல்லம்- 50 கிராம்
ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்
கல் உப்பு- 25 கிராம்

செய்முறை:

கெட்டியான வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, மிளகாயை பொடியாக நறுக்கி வதக்கவும். புளியை கெட்டியாக கரைத்து அதில் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு, வெல்லம், ஊறுகாய்பொடியை சேர்க்கவும். சிம்மில் வைத்து கொதிக்கவிட்டால் கொதிக்கம்போது தெளிக்காது. சுருள வதங்கியபின் இறக்கி ஆறியபின் பாட்டிலில் வைத்து பயன் படுத்தவும். மேலே கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வைக்கவும்.

இஞ்சி ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

இஞ்சி- 200கிராம்
புளி- 50 கிராம்
புதிய மிளகாய் பொடி 50 கிராம்
கல் உப்பு- 1/4 கப்
வெல்லம் - 25 கிராம்

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி, புளியுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்ததை போட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள், போட்டு சுருள வதங்கியபின் மிளகாய் பொடி, ஊறுகாய் பொடி-1 ஸ்பூன் போட்டு நன்கு கலந்து, சிறியகட்டி வெல்லம் சேர்த்து, தேவையான நல்லெண்ணெய் கலந்து ஆறிய பின் பாட்டிலில் வைத்து கொள்ளவும். இஞ்சி ஊறுகாய் தயார்.

ஊறுகாய் பொடி

தேவையான பொருள்கள்:

வெந்தயம்- 200 கிராம்
கடுகு- 100 கிராம்
மஞ்சள்தூள் - 50 கிராம்
பெருங்காயம் - கட்டி பெருங்காயமாக இருந்தால் ஊறுகாய் இன்னும் நன்கு
வாசனையாக இருக்கும்.

செய்முறை:

பெருங்காய கட்டியை வாங்கி சிறியதாக பிய்த்து வெயிலில் காய வைத்து வெறும் வாணலியில் போட்டு சிம்மில் எரியவிட்டு பொரிக்கவும். அதை மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொள்ளவும். புதிய மிளகாயை வாங்கி நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்து கொண்டால் ஊறுகாய் நல்ல சிகப்பு கலரில் இருக்கும். எந்த ஊறுகாய் செய்தாலும் இந்த பொடிகள் கைவசம் இருந்தால் சீக்கிரம் செய்ய வசதியாக இருக்கும்.

ஆவக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய்-10
புதிய மிளகாய் 1/4 கிலோ, [அ] மிளகாய்தூள்- 1/4 கிலோ
கடுகு- 100 கிராம்
மஞ்சள்தூள்- 50 கிராம்
பெருங்காயதூள்- 50 கிராம்
கல் உப்பு- 200 கிராம்
நல்லெண்ணெய்- 1 லிட்டர்

செய்முறை:

மாங்காயை தேவையான துண்டுகளாக உள்ளே இருக்கும் ஓடுடன் நறுக்கவும். ஒரு நாள் நிழல் உலர்த்தலில் காயவிட்டு [ மாங்காயின் உள் இருக்கும் ஈரம் காய்வதற்கு] கெட்டியான ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளாகாயாக இருந்தால் வெயிலில் நன்கு காயவிட்டு மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். கடுகையும் பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் கொஞ்சம் போட்டு, கல் உப்பு கொஞ்சம் போட்டு மஞ்சள்தூளும் போடவும். கொஞ்சம், கொஞ்சமாக எல்லாவற்றையும் போட்டு, கடைசியில் வெறும் வாணலியில் பெருங்காயத்தை வறுத்து போடவும். நல்லெண்ணெய்யை 2 நாட்கள் வெயிலில் வைத்து அதன் மேல் ஊற்றி நன்கு கலந்து விடவும். தினமும் நன்கு கலந்து விடவும். 1 வாரத்தில் நன்கு ஊறி விடும். பூண்டு விருப்பபட்டால் பூண்டை உறித்து அதில் போடலாம். பச்சை கொண்டைகடலையும் அதில் ஊற வைத்து கொள்ளலாம். இதெல்லாம் சேர்க்கும்போது கொஞ்சம் கல் உப்பு சேர்க்கவும். ஆவக்காய் மாங்காய் ஊறுகாய் தயார்.

Sunday, January 20, 2008

மாவடு ஊறுகாய்

தேவையானவை:

சிறிய காம்புடன் உடைய மாவடு- 2 கிலோ
கல் உப்பு- 400 கிராம்
மிளகாய் பொடி- 400 கிராம்
கடுகு பொடி- 100 கிராம்
விளக்கெண்ணெய் - 50 கிராம்
மஞ்சள்தூள்- 25 கிராம்

செய்முறை :

மாவடுவை சுத்தம் செய்து, துடைத்து ஈரம் இல்லாமல் வைக்கவும். கொஞ்சம், கொஞ்சமாக மாவடுவில் விளக்கெண்ணெய் + மஞ்சள்தூள் கலந்து பிசிறி எல்லாவற்றையும் செய்யவும். கெட்டியான ப்ளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு, உப்பையும் போட்டு நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். தினமும் குலுக்கி விடவும். 3,[அ] 4 நாட்களில் நன்கு நீர் விட்டு இருக்கும். அந்த நிரில் கடுகு பொடி, மிளகாய்தூள், போட்டு கலக்கவும். மாவடு நீரிலேயே கடுகு, மிளகாயை அரைத்தும் போடலாம். வாரம் ஒரு முறையாவது குலுக்கிவிடவும். எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.

Saturday, January 19, 2008

பூண்டு இல்லாத, மசால்பொடி சேர்க்காத தக்காளி சாதம்.

தேவையான பொருள்கள்:

உங்களுக்கு பிடித்த அரிசி - 1 டமளர்
தக்காளி - 5
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-3
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது

பொடி செய்ய:

கடலைப்பருப்ப, உளுத்தம்பருப்பு, தனியா- தலா- 1 ஸ்பூன், பெருங்காயம்- சிறிய துண்டு, மிளகாய்-3 தேங்காய் துறுவியது- 2 ஸ்பூன், கொஞ்சம் உப்பு. தாளிக்க- கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

ப்ரஷர் பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். அதன்பின் தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி அதில் போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சாறு சுண்டியபின் அரிசியைபோட்டு சிம்மில் வைத்து வதக்கவும். பொடி செய்ய கூறபட்டுள்ளதை சிவப்பாக வறுத்து பொடிசெய்து அரிசியுடன் போட்டு வறுக்கவும். தேவையான எண்ணெய் சேர்த்து கொள்ளவும். 2நிமிடம் கழித்து 2பங்கு தண்ணீர் ஊற்றி பேனை மூடி வைத்து சிம்மில் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியபின் மேலே, மல்லி இலை தூவி சாப்பிடவும். தேவையானால் 2ஸ்பூன் நெய் போடலாம்.சுவையாக இருக்கும் இந்த தக்காளி சாதம். நேரம் கிடைக்கும்போது பொடியை செய்து வைத்து கொண்டால் இன்னும் சீக்கிரம் செய்து விடலாம்.

Thursday, January 17, 2008

பொடி போட்ட தக்காளி குழம்பு

தேவையான பொருள்கள்:

தக்காளி- 6
புளி எலுமிச்சை அளவு
பூண்டு- 10 பற்கள், சிறிய வெங்காயம்-20
பச்சை மிளகாய்-5
மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
தனியாதூள்- 1/4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- கொஞ்சம்
உப்பு- தேவையானது
தாளிக்க கடுகு, வெந்தயம், சீரகம்.
பொடிக்க: மிளகு-10, உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்,சீரகம்-1/4 ஸ்பூன், வெந்தயம்- 1/4 ஸ்பூன், கடுகு- 1/4 ஸ்பூன்.

செய்முறை:

புளியை சுடுநீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும். தக்காளி, பூண்டு, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். இன் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள், பச்சைமிளகாய், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து பொடி செய்து வைத்துள்ளதை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு செய்யவும். கடுகை தாளித்துபோட்டு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி குழம்பில் ஊற்றவும். 2, 3 நாடகள் இருந்தால்கூட இந்தகுழம்பு கெடாது. கடைசியில் சிறியகட்டி வெல்லம் சேர்க்கவும். சூப்பராக இருக்கும் இந்த குழம்பு.