Monday, November 5, 2007

இனிப்பு பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - 2 கப்,
பாசிபருப்பு - 1 கப்,
வெல்லம் - 3 கப்,
நெய் - 3/4 கப்,
முந்திரி - 20, சிறிதாக ஒடித்து கொள்ளாவும்,
ஏலக்காய் - 3,
பச்சை கற்பூரம் - மிளகில் பாதி அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் பருப்பை சிவப்பாக வறுத்து, அரிசியையும் லேசாக வறுத்து, குக்கரில் [3] கப்புக்கு 6- கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசி, பருப்பை போட்டு வேக வைக்கவும். 2,3 விசில் விடலாம். நன்கு குழைந்து இருந்தால்தான் அது பொங்கல். வேறு ஒரு வாணலியில் வெல்லத்தை போட்டு கொஞ்சம் நீர் ஊற்றி கரைந்து வந்த சமயம் கல், மண் இல்லாமல் சுத்தம் செய்து மறுபடியும் கெட்டியான பாகு வைத்து, அதை வெந்த அரிசி, பருப்பில் போட்டு நன்கு கலந்து, மசித்து விட்டு, நெய்யில், முந்திரியை வறுத்து போடவும். ஏலக்காய், பச்சை கற்பூரம், போட்டு கிளறினால் சுவையான பொங்கல் ரெடி. மீதி நெய்யை பொங்கல் மேல் ஊற்றி விடவும். வெல்லத்தை பாகு வைத்து போட்டால்தான் மீதி இருந்தால் கூட 2 நாட்களுக்கு கெடாது. அரிசி,பருப்பு ரொம்ப குழைவாக வேண்டும் எனில் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இல்லையெனில் கடைசியாக கெட்டியான பால் சேர்க்கலாம். பாகு சேர்க்கும்போது கொஞ்சம் தளர்வாக இருக்கும். பயப்படவேண்டாம். சிறிது நேரத்தில் கெட்டியாக மாறிவிடும். பாகை சேர்க்கும் சமயம் கொஞ்சம் கைவிடாமல் கிளறினால் கட்டி தட்டாது. ஸ்வீட் அதிகம் வேண்டும் என்றால் இன்னும் 1/2 கப் வெல்லம் சேர்க்கலாம். சர்க்கரை சேர்த்தும் இந்த பொங்கல் செய்யலாம். பொங்கல் வெள்ளையாக இருக்கும். ஆனால் சர்க்கரை 5 கப் போட்டு செய்யனும். அதையும் பாகு காய்ச்சி செய்யனும்.

அரிசி, பருப்பை வறுத்து செய்தால்தான் பொங்கல் வாசனையாக இருக்கும். அரிசி, பருப்பை கொஞ்சம் எடுத்து, வாணலியில் கடுகு, இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், தட்டி, நெய்யில் பொரித்து் காரத்துக்கு 2 பச்சைமிளகாய் கீறி போட்டு தேவையான உப்பும் போட்டு மேலே கொஞ்சம் நெய் ஊற்றினால் வெண்பொங்கலும் தயார். இரண்டும் தேவைஎனில் அதற்கு தகுந்தபடி அரிசி, பருப்பு போடவும். ருசியான இரண்டு பொங்கலும் ஒரே சமயத்தில் செய்யலாம்.

No comments:

Post a Comment